அண்மைய செய்திகள்

recent
-

இன்றுடன் நிறைவுபெறும் திருக்கேதீஸ்வரம் புதைகுழி அகழ்வு பணிகள்


    மன்னார் திருக்கேதீஸ்வரப் பகுதியில் மனித எச்சங்களை புதைகுழியிலிருந்து தேடிகண்டுபிடிக்கும் அகழ்வு பணிகள் இன்று புதன்கிழமையுடன் (5) முடிவுற்றதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் சம்பந்தப் பட்ட அதிகாரிகளுடன் இன்று புதன் கிழமை புதைகுழி பகுதியில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலை அடுத்து எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 குறித்த புதைகுழி பகுதியில் மனித எச்சங்களை அகழ்வு செய்ய தீர்மானிக்கப்பட்ட பகுதியில் மனித எச்சங்கள் மீட்க்கப்பட்டு  நிறைவுற்ற நிலையில் குறித்த தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளது.

   இதேவேளை இவ் புதைகுழியை அண்டிய பகுதியில் மனித எச்சங்கள் மேலும் தென்படுவதால் இது சம்பந்தமான அறிக்கை ஒன்றை சமர்பித்து அதன் பின் எடுக்கப்படும் தீர்மானத்தை தொடர்ந்து இப் பகுதியில் அகழ்வு பணி தொடரலாம் எனவும் தெரியவருகிறது.
   மன்னார் திருக்கேதீஸ்வரப் பகுதியில் கடந்த வருடம் 20 ந் திகதி கண்டுப்பிடிக்கப்பட்டு பின் குறித்த மாதம் 23 ந் திகதி மன்னார் நீதிபதி ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவுக்கமைய அகழ்வு செய்யப்பட்டு வந்த இவ் மனித புதை குழி அகழ்வு இன்று புதன் கிழமையுடன் நிறைவுபெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து கடந்த திங்கள் கிழமை (3) வரை குறிப்பிடப்பட்ட 32 தடவைகள் நடைபெற்ற குறித்த  அகழ்வின் போது 120 செ.மீ ஆழத்திலும் 8 மீற்றர் 50 செ.மீ அகழத்திலும் , 20 மீற்றர் 50 செ.மீ நீளத்திலும் இடம்பெற்ற இவ் அகழ்வுப் பணியில் 80 மனித எலும்புக்கூடுகளும் எச்சங்களும் அத்துடன் தடயப் பொருட்களும் கண்டுப்பிடிக்கப்பட்டு அவைகள் குழியிலிருந்து அகற்றப்பட்டது.


     இதன்பின் இவைகளை தனித்தனி பெட்டிக்குள் பொதிசெய்யப்பட்டு பகுப்பாய்விற்கென மன்னார் பொது வைத்தியசாலயில் ஒரு பிரத்தியேக அறையில் வைக்கப்பட்டுள்ளன.

  இந்த நிலையில் இன்று புதன் கிழமை மன்னார் நீதிபதி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அகழ்வு செய்யப்பட்ட புதை குழி இடத்தில் இவ் புதை குழி அகழ்வுக்கு பொறுப்பாக இருந்த சட்ட வைத்திய நிபுணர் டீ.எல். வைத்தியரத்தின ,கொழும்பிலிருந்து வருகை தந்த தொல்பொருள் ஆய்வுப் பணிப்பாளர் என்.கொடித்துவக்கு, தொல்பொருள் ஆய்வு உத்தியோகத்தர் விஐயரட்ன, மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.கே. யோசப், மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கந்தேவத்த, மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பெரமுன்ன, கொழும்பு குற்ற புலணாய்வு திணைக்கள பிரதம பொலிஸ் பரிசோதகர் விக்கிரமசேகர ஆகியோருக்கிடையே கருத்து பரிமாற்றல் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

   இவ் கூட்டம் இன்று காலை 9.30 மணி தொடக்கம் காலை 10.50 வரை இடம்பெற்றது.

   இவ் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய ஏற்கனவே இவ் மனித புதை குழியை அகழ்வு செய்வதற்காக அளவீடு செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டிருந்த குழி பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனைஅடுத்து இத்துடன் இவ் புதை குழி அகழ்வை நிறுத்தப்படுவதாகவும்
    இவ் புதை குழி அகழ்வுக்காக அமைக்கப் பட்டிருந்த தற்காலிகை கொட்டகை எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை அகற்றுவது எனவும் தெரிவிக்கப்பட்டதுடன்
   இவ் புதை குழியை அண்டிய பகுதியில் மேலும் மனித எச்சங்கள் இருக்கலாம் என்ற அறிகுறிகள் தென்படுவதால் இது சம்பந்தமான அறிக்கை ஒன்றை சமர்பித்து அதன்பின் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைவாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    அத்துடன் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளையும் தடயப் பொருட்களையும் பகுப்பாய்வு செய்வதற்காக எங்கு எடுத்துச் செல்ல இருப்பதற்கான அறிக்கையை எதிர் வரும் மே மாதம் 9 ந் திகதி மன்னார் நீதிமன்றில் சமர்பிக்கும்படி மன்னார் நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம்  சம்பத்தப் பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்றுடன் நிறைவுபெறும் திருக்கேதீஸ்வரம் புதைகுழி அகழ்வு பணிகள் Reviewed by Author on March 05, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.