ஜெயலலிதா மற்றும் சசிகலா மீது மற்றுமொரு வழக்குத்தாக்கல்
ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், அவர்கள் மீது ஏற்கனவே தொடரப்பட்ட இன்னுமொரு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் மீது வருமான வரித் துறையினர் 1996ஆம் ஆண்டு எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு, நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமிற்கு செப்டெம்பர் 27ஆம் திகதி பெங்களுர் சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபா அபராதமும்
விதித்து தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் மீது வருமான வரித்துறையினர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் மற்றும் சசிகலா மீதான வருமான வரித்துறையினரின் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 16ஆம் திகதிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஜெயலலிதா ஜெயராம் மற்றும் சசிகலா ஆகியோர் பங்குதாரர்களாக இருந்த நிறுவனத்தின் 1991 மற்றும் 1993 ஆம் ஆண்டு காலப் பகுதிகளுக்கான வருமான வரிக் கணக்குகளையும், அவர்களின் தனிப்பட்ட வருமான கணக்குகளையும் தாக்கல் செய்யவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாமைக்கான அபராத தொகையை செலுத்துவதற்கு தயாராக இருப்பதாக வருமான வரித்துறையினரிடம் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
இந்த மனு மீது வருமானவரித் துறையினர் இன்னும் முடிவை அறிவிக்கவில்லை என்றும், அதுவரை வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறும் சட்டத்தரணிகள் வாதாடியுள்ளனர்.
இந்த வாதத்தை பரிசீலித்த நீதிமன்றம் வழக்கு விசாரணைகளை பிற்போடுவதற்கு தீர்மானித்துள்ளது.
ஜெயலலிதா மற்றும் சசிகலா மீது மற்றுமொரு வழக்குத்தாக்கல்
Reviewed by NEWMANNAR
on
October 03, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 03, 2014
Rating:


No comments:
Post a Comment