மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவின்றி அரச செலவில் அடக்கம் செய்யப்பட்ட சடலம் நீதவான் முன்னிலையில் தோண்டியெடுப்பு.-Photo
மன்னார் நீதிமன்றம் உத்தரவிடாத நிலையில் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்ட உரிமை கோரப்படாத சடலம் மன்னார் நீதவானின் உத்தரவிற்கு அமைவாக குறித்த சடலம் இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,
மன்னார் வங்காலை கடற்படை முகாமிலிருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவில் கடந்த 03-09-2014 அன்று சடலம் ஒன்று உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கியது.குறித்த சடலத்தை பார்வையிட்டு மரண விசாரணைகளை மேற்கொண்ட மரண விசாரணை அதிகாரி தே.பி.சிந்தாத்துரை குறித்த சடலத்தை அடையாளம் காண்பதற்காக மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் இரண்டு வாரங்களுக்கு வைக்குமாறும் அடையாளம் காணாது விட்டால் சடலப்பரிசோதனையின் பின் அரச செலவில் அடக்கம் செய்ய உத்தரவிட்டார்.
அதே போன்று மன்னார் சௌத்பார் கடற்கரை பகுதியில் கடந்த 15-09-2014 அன்று உருக்குலைந்த நிலையில் இரண்டாவது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த சடலத்தை பார்வையிட்ட மரண விசாரணை அதிகாரி குறித்த இரண்டாவது சடலத்தையும் அடையாளம் காண்பதற்காக இரு வாரங்களுக்கு மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் பாதுகாப்பாக வைக்கும்படியும் பின் சடல பரிசோதனை மேற்கொண்ட பின் அரச செலவில் குறித்த சடலத்தை அடக்கம் செய்யும் படியும் மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் மன்னார் வங்காலை கடற்கரையில் கடந்த 3-09-2014 அன்று முதலில் மீட்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனை மேற்கொண்டபின் 24.9.2014 அன்று அரச செலவில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் குறித்த சடலம் சடலப்பரிசோதனை மேற்கொள்ளப்படட போதும் குறித்த சடலத்தை அடக்கம் செய்வதற்கு பதிலாக இரண்டாவது தடவையாக மன்னார் சௌத்பார் கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் தவறுதலாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் சௌத்பார் கடற்கரைப்பகுதியில் இரண்டாவது தடவையாக மீட்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனை செய்து அரச செலவில் புதைப்பதற்கு 29.9.2014 அன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது குறித்த சடலம் மாறி புதைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் குறித்த சடலம் தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 2 ஆம் திகதி(02-10-2014) மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்றது.இதன் போது விசாரணைகளை மேறகொண்ட மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் குறித்த சடலத்தை நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுத்து சடலப்பரிசோதனைக்கு உற்படுத்துமாறு நீதவான் ஆனந்தி கனகரட்ணம் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நீதவானின் உத்தரவிற்கு அமைவாக குறித்த சடலம் இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் பொது மயானத்தில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம்,சட்ட வைத்திய அதிகாரி என்.ஐ.வி.இருசானா ஆகியோர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.
இதன் போது மன்னார் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வி.ரூபன் லெம்பேட்,மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரஜனி அன்ரன் சிசில் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் குறித்த இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
இதன் போது விசேட குற்றவியல் ஆய்வு பிரிவு பொலிஸார் மற்றும் பணியாளர்கள் இணைந்து குறித்த சடலத்தை நீதவான் முன்னிலையில் தோண்டி எடுத்தனார்.
தற்போது குறித்த சடலம் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவின்றி அரச செலவில் அடக்கம் செய்யப்பட்ட சடலம் நீதவான் முன்னிலையில் தோண்டியெடுப்பு.-Photo
Reviewed by NEWMANNAR
on
October 04, 2014
Rating:

No comments:
Post a Comment