சுயலாபத்திற்காக கடல்வளத்தை அழிக்க அனுமதிக்க முடியாது: பா.டெனீஷ்வரன்
யாழ்.மாவட்டத்தில் இழுவைப்படகுகள் மூலம் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு தமக்கு அனுமதி வழங்குமாறு கோரி வடமராட்சிப் பகுதி இழுவைப் படகு தொழிலாளர்கள் நாளைய தினம் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வடக்கு மாகாணத்தில் சட்டத்திற்கு மாறாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு தொழிலுக்கும் இடமளிக்கப் போவதில்லை என வடமாகாண கடற்றொழில் அமைச்சர் பா.டெனீஷ்வரன் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இழுவைப் படகு மூலமான தொழில் மாவட்டத்திலுள்ள 15 ஆயிரம் கடற்றொழிலாளர்களை பாதிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்.குருநகர் பகுதியில் சுமார் 75 வரையிலான இழுவைப் படகுகள் தொழிலில் ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில் உள்ளுரில் உள்ள இழுவைப் படகுகள் மற்றும் இடைமடி போட்டி மீன் பிடித்தல் போன்ற முறைகள் சட்ட ரீதியாக தடுக்கப்பட்டுள்ளன.
குருநகர் மீனவர்கள் மாற்று திட்டங்களை முன்மொழிந்து அவற்றை பெற்று இழுவைப் படகுகள் மூலமான கடற்றொழிலை கைவிட்டுள்ளனர்.
இந்நிலையில் வடமராட்சிப் பகுதியில் மட்டும் சுமார் 23 வரையான இழுவைப் படகுகள் தொடர்ந்தும் தொழிலில் ஈடுபட்டுவந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அவையும் தடுக்கப்பட்டது.
தடுக்கப்பட்ட தமது தொழிலை மீள செய்வதற்கு அனுமதிக்குமாறும், தொழில் தடைப்பட்டுள்ளமையினால் தாம் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.
இந்நிலையில் தமது கோரிக்கையினை வலியுறுத்தி நாளைய தினம் தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுக்கப் போவதாகவும், மீனவர்கள் கூறியிருக்கின்றனர்.
சட்டத்திற்கு மாறான எந்தவொரு தொழிலுக்கும் வடமாகாண கடலில் இடம் கிடையாது. இந்திய இழுவைப் படகுகளிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், உள்ளூரில் செய்வது முறையில்லை.
மேலும் இது எங்கள் கடல்வளத்தை ஒரு சிலர் தங்கள் சுயலாபத்திற்காக அழிக்கும் செயற்பாடாகும். அதனை ஒருபோதும் நாம் ஒத்துக் கொள்ளமுடியாது.
எங்களுடைய பெறுமதியான வளத்தை நாம் அடுத்த சந்ததிகளுக்கும் கையளிக்க வேண்டும். அதைவிடுத்து அழித்து விட முடியாது.
இதேபோன்று நாம் 23 கடற்றொழிலாளர்களுக்காக 15ஆயிரம் ஏழை கடற்றொழிலாளர்களை நடு வீதியில் விடவும் முடியாது.
எனவே எங்களுடைய இந்த நல்ல நோக்கத்திற்காக எவ்வாறான எதிர்ப்பு எமக்கு முன்னால் வந்தாலும் அதனைக் கண்டு நாங்கள் பின்வாங்கப் போவதில்லை என அவர் கூறியிருக்கின்றார்.
சுயலாபத்திற்காக கடல்வளத்தை அழிக்க அனுமதிக்க முடியாது: பா.டெனீஷ்வரன்
Reviewed by NEWMANNAR
on
October 05, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 05, 2014
Rating:

No comments:
Post a Comment