மன்னாரில் தெருவோர பண்டிகைக்கால வியாபாரம் மக்களின் நலன் கருதி 10 நாட்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது-இ.குமரேஸ்.
பண்டிகைக்கால தெருவோர வியாபாரத்தை தடை செய்யக்கோரி மன்னார் நகர சபைக்கு வர்த்தக சங்கத்தினூடாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ள நிலையில் வர்த்தகர்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்யாது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
வர்த்தகர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக 20 நாட்களுக்கு பண்டிகைக்கால வியாபரங்கள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படவிருந்த நிலையில் தற்போது 10 நட்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை இந்த பண்டிகைக்கால வியாபாரங்களை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்களின் நலன் கருதியும் தற்போது மக்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் நிலையில் அந்த மக்கள் நத்தார்,புதுவருட பண்டிகைகளை கொண்டாட வேண்டும்.
பொருட்களை மலிவாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும்,நிரந்தர வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டும் 10 நாட்களாக இந்த பண்டிகைக்கால வியாபாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தீர்மானம் மன்னார் நகர சபையின் கடந்த மாத கூட்டத்தில் தீர்மானமாக எடுக்கப்பட்டதாக மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை இன்றைய சூழலில் பண்டிகைக்கால விற்பனையை நிறுத்துவது பொருத்தமற்றது என மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
கடந்த பல வருடங்களாக யுத்தத்தின் அழிவு அது ஏற்படுத்திய பொருளாதார இழப்பு, போதுமான வருமானம் இன்மை என பல சுமைகளுடன் வாழும் எமது மக்கள் தன் குடும்ப உறவுகளுக்கும் ஏனைய தங்களது உறவினர்களுக்கும் இவ்வாறன சந்தையின் ஊடாக தனது பொருளாதரத்திற்கு ஏற்றவாறு பொருட்களை கொள்வனவு செய்யக் கூடியவாறு இவ் பண்டிகைகால சந்தையை பயன்படுத்தி வருகின்றனர்.
மன்னார் மாவட்டம் மீன்பிடி மற்றும் விவசாயத்தை நம்பி வாழும் மக்களை கொண்ட மாவட்டமாகும்.
அதிலும் குறிப்பாக இவ் இரு தொழில்களை மேற்கொள்ளுபவர்கள் பெரும்பான்மையாக கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்தவர்கள்.
தற்போது இவ் இரு தொழில்களும் போதிய வருவாயை பெறக்கூடியதாக இல்லை.
இன்றைய நிலையில் ஆடம்பரமாக வாழும் அளவுக்கு மக்களிடம் வசதியும் இல்லை.
தனது பொருளாதரத்தின் தன்மைக்கேற்ப இவ்வாறன பண்டிகையை கொண்டாட மக்களுக்கு உள்ள ஒரே தெரிவு இவ் பண்டிகைகால சந்தையே என்பது உண்மை.
மறு புறம் எமது வர்த்தகர்கள் கூறும் காரணங்களான வருமானத்திற்காக இவ்வியாபார நடவடிக்கைக்கு நகர சபை துணை நிற்பதாக கூறுவது ஏற்புடையதல்ல.
மேலும் அவர்களின் வியாபார நடவடிக்கையை முடக்குகின்றன என கூறும் அவர்களின் காரணமும் நிராகரிக்க முடியாதவை. இது தற்போதைய சபை உறுப்பினர்கள் புதிதாக அனுமதித்த விடயமல்ல.
கடந்த பல காலமாக வருடா வருடம் அனுமதிக்கப்பட்ட ஒரு சந்தை நடவடிக்கை என்பது மறுக்க முடியாததும் மக்கள் பிரதிநிதிகள் தெரிவுக்கு முன் ஒரு சிலர் இடைத்தரகராக செயற்பட்டு பலஆயிரம் ருபாய்களை தங்கள் பைக்குள் போட்டுக் கொண்டு நகரசபையை தவராக வழி நடாத்திய சம்பவங்களும் மறுப்பதற்கில்லை. என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் தெருவோர பண்டிகைக்கால வியாபாரம் மக்களின் நலன் கருதி 10 நாட்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது-இ.குமரேஸ்.
Reviewed by NEWMANNAR
on
December 02, 2014
Rating:

No comments:
Post a Comment