மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன் என்பவருக்கு கொலை மிரட்டல்.
மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன் என்பவரது வீட்டிற்கு நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.40 மணியளவில் சென்ற இனம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தி சென்றுள்ளதாக நகர சபை உறுப்பினர் இன்று காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மன்னார் உப்புக்குளம் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் வீட்டுக்கதவை தட்டினர்.
பின் வெளியில் நின்று சிங்களத்தினால் கடும் தொனியில் அச்சுறுத்தினர்.பின் தமிழில் கடும் தொனியில் கதைத்தனர்.
என்னை வெளியே வரும்படி அழைத்தனர்.நான் வெளியில் செல்லவில்லை.பின் என்னை கொலை செய்யப்போவதாகவும்,9 ஆம் திகதிக்கு பின் நாங்கள் யார் என காட்டுவதாகவும் தெரிவித்தனர்.பின் வீட்டிற்கு வெளியில் கிடந்த சில கண்ணாடி போத்தல்களை எடுத்து வீட்டிற்குள் எறிந்து விட்டு சென்றனர்.
வெளியில் மோட்டார் சைக்கில் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.கதைத்தவர்கள்,தமிழ்,சிங்கள மொழிகளை அரை குறையாக கதைத்தனர்.
இந்த நிலையில் எனக்கு அச்ச நிலை ஏற்பட்டது.உடனடியாக இன்று சனிக்கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன் மேலும் தெரிவித்தார்.
மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன் என்பவருக்கு கொலை மிரட்டல்.
Reviewed by NEWMANNAR
on
January 03, 2015
Rating:

No comments:
Post a Comment