
தாய்லாந்து மற்றும் மலேசியா கடற்கரைகளை வந்தடைந்த சமயம் பல தடவைகள் திருப்பி அனுப்பப்பட்ட படகொன்றிலிருந்த 400 குடியேற்றவாசிகள் புதன்கிழமை மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குடியேற்றவாசிகள் தொடர்பில் மேற்படி ஆசிய பிராந்திய நாடுகளிடையே எட்டப்பட்ட உடன்படிக்கையொன்றையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி படகானது கடந்த வாரம் இயந்திரம் பழுதடைந்த நிலையில் அவதானிக்கப்பட்டது.
மியன்மார் மற்றும் பங்களாதேஷிலிருந்து பல்லாயிரக்கணக்கான குடியேற்றவாசிகளை ஏற்றி வந்த பல படகுகளில் இந்தப் படகும் ஒன்றாகும்.
அளவுக்கதிகமான எண்ணிக்கையில் வந்தடையும் குடியேற்றவாசிகளை ஏற்றுக் கொள்வதற்கு மலேசியா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வந்திருந்தன.
இந்நிலையில் அந்த நாடுகளிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளையடுத்து குடியேற்றவாசிகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
மனிதாபிமான நெருக்கடியை கருத்திற்கொண்டு குடியேற்றவாசிகளுக்கு தற்காலிக தங்குமிட வசதியை வழங்கவுள்ளதாக இந்தோனேசியாவும் மலேசியாவும் தெரிவித்துள்ளன. எனினும் தாம் ஆபத்துமிக்க கடல் பயணங்களை மேற்கொண்டு வரும் குடியேற்றவாசிகளைத் தேடும் செயற்பாட்டில் ஈடுபடப் போவதில்லை எனவும் தமது கடற்கரையை வந்தடையும் குடியேற்றவாசிகளுக்கு தங்குமிட வசதியை மட்டுமே வழங்கவுள்ளதாகவும் மலேசிய வெளிநாட்டு அமைச்சர் அனிபஹ் அமான் தெரிவித்தார்.
சர்வதேச சமூகம் அவர்களை ஒரு வருடத்திற்குள் அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப அல்லது அவர்களை மீளக் குடியமர்த்த உதவும் என்ற நிபந்தனையின் கீழேயே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பில் இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் கோலாலம்பூரில் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தோனேசிய கடற்கரைப் பிராந்தியத்தில் மட்டும் 2,000 க்கும் அதிகமான குடியேற்றவாசிகள் படகுகளில் ஸ்தம்பி தமடைந்த நிலையில் உள்ளனர். இது தொடர்பில் மலேசிய வெளிநாட்டு அமைச்சர் கூறுகையில், பிராந்தியத்தில் மொத் தமாக 7,000 பேருக்கும் அதிகமானோர் படகு களில் ஸ்தம்பிதமடைந்த நிலையில் உள்ளதாக நம்புவதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment