அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச விசாரணை ஒன்றே எமது இலக்கு- உலக தமிழர் இயக்கம்


இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு விரைவில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என கோரி உலக தமிழர் இயக்கத்தினால் ஒரு மில்லியன் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பிற்கான செயற்பாடு என்பது உலகெங்கும் பரந்து வாழும் அனைவரும் அறிந்த உண்மை என இது தொடர்பில் உலக தமிழர் இயக்கத்தினால் வெளிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்களும் சரி தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய அரசாங்கமும் சரி தமிழர்களின் பிரச்சினைக்கு எப்போதும் நிரந்தர தீர்வினை பெற்றுத்தரப்போவது இல்லை. மாறாக தொடர்ந்தும் இன அழிப்பையும் நில அபகரிப்பையும் மேற்கொள்கின்றதே தவிர தமிழர் நலன் சார்ந்த விடயங்களில் இதுவரை எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டு 6 ஆண்டுகள் கடந்துள்ளன. இந்த விடயத்தில் நீதியை நிலை நாட்ட வேண்டிய ஐக்கிய நாடுகள் சபை கால நீடிப்பையே மேற்கொள்கின்றது. ஒவ்வொரு முறை கூடும் போதும் இன்று எமக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புவதும் அவர்கள் காலநீடிப்பை ஏற்படுத்தும் போது அடுத்த முறை தீர்வு கிடைக்கும் என நம்பியே இன்றைய தமிழர்கள் இலவு காத்த கிளிபோல் காத்திருக்கின்றனர். இவற்றின் ஒரு கட்டமாகவே ஒரு மில்லியன் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை நாடு கடந்த தமிழீழ இயக்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் தாமதமடைந்ததையடுத்து இந்த நடவடிக்கையை உலக தமிழர் விடுதலை இயக்கம் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளது. உலகெங்கும் உள்ள தமிழ் உறவுகள் அனைவரும் ஒரு நிமிடம் எமது ஈழ விடுதலைக்காய் வித்தாகிய எமது உடன் பிறப்புகளுக்கு காணிக்கையாய் இதில் பங்கேற்க வேண்டும். வலிகளே வாழ்வாகிய எமது மக்களின் எதிர்காலம் சுபீட்சமாக மாறவேண்டுமானால் ஒவ்வொரு தமிழனதும் வாழ்வில் நின்மதி மலர வேண்டுமாக இருந்தால் சர்வதேச விசாரணை அவசியம். இதற்கென ஒரு நிமிடம் எம்மால் செலவு செய்ய முடியாதா? போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் போராட்ட இலக்கு என்றுமே மாறாது. உலகில் பேரழிவுகளை சந்தித்த நாடுகள் இன்று சுதந்திரம் பெற்றுள்ளன என்பது உலக வரலாறு. அது போன்று எமது மக்களுக்கும் தமிழ் ஈழம் மலரும். நமது கனவு நனவாகும் என்பது நம்பிக்கை. எனவே மிக விரைவில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எதற்கும் சளைக்காத தமிழர்கள் என்பதை சர்வதேசத்திற்கு உணர்த்த வேண்டும். சாதிக்கப் பிறந்த தமிழர் நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்த உலகிற்கு உணர்த்துவோம். அநியாயமாக கொன்று குவிக்கப்பட்ட நமது உறவுகளின் கொலைக்கு நீதி வேண்டி அப்பாவி மக்களுக்காக ஒரு நிமிடத்தை செலவு செய்யுங்கள். எமது இலக்கை அடையும் வரை தொடர்ந்தும் போராடுவோம். தமிழர் நாம் தாயகத்தை ஆளும் காலம் வெகு விரைவில் வரும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விசாரணை ஒன்றே எமது இலக்கு- உலக தமிழர் இயக்கம் Reviewed by Author on June 04, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.