இந்து மத போதனா ஆசிரியர்களை புறக்கணித்தது அரசாங்கம்: யோகேஸ்வரன் எம்.பி
கல்வியமைச்சினால் பௌத்தம் மற்றும் முஸ்லிம் மத போதனை ஆசிரியர்கள், அரச ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ள போதிலும் இந்து மத ஆசிரியர்கள் எவரும் இதுவரையில் உள்வாங்கப்படவில்லையென கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கூழாவடி விபுலானந்தா அறநெறிப் பாடசாலையின் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் நேற்று மாலை கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கூழாவடி விபுலானந்தா அறநெறிப்பாடசாலையின் தலைவரும் கூழாவடி இந்து இளைஞர் மன்ற தலைவருமான ப.யோகராஜன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நாட்டில் இருக்கின்ற விஞ்ஞான செயற்பாடுகள் இந்து மதத்தின் மெய்ஞானத்தில் இருந்துவந்ததாகும்.
மாணவர்களின் திறன்களை வளர்ப்பதில் இந்து சமயம் பலவிதத்தில் பங்காற்றிவருகின்றது.
அந்த வகையிலேயே கூழாவடி விபுலானந்தா அறநெறிப்பாடசாலை போதனைகளை மட்டும் வழங்காமல் போதனையுடன் உடலையும் வளப்படுத்தும் நிகழ்வினை செய்கின்றது.
அறநெறிப்பாடசாலைகளை பொறுத்தவரையில் இலங்கையில் கிட்டத்தட்ட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அறநெறிப்பாடசாலைகள் இருக்கின்றன.
இந்த அறநெறிப்பாடசாலைகள் போதிய வசதிகள் இன்றியே இயங்கிவருகின்றன.
அறநெறிப்பாடசாலையினை வளப்படுத்துவதற்கு இந்துக்கலாசார திணைக்களம் கூடுதலான கவனத்தினை செலுத்தியிருந்தாலும் அறநெறிப்பாடசாலைகளில் நியாயமாக மேற்கொள்ளவேண்டிய பணிகள் அரசாங்கத்தினால் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த காலத்தில் ஏனைய மதங்களின் போதனை ஆசிரியர்கள் அரச நியமனங்களில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் எந்த நியமனங்களுக்குள்ளும் உள்வாங்கப்படவில்லை.
சுமார் 25 வருடகாலமாக இந்துக்கலாசார திணைக்களம் இந்த அறநெறிப்பாடசாலைகளை தமது திணைக்களத்தின் கீழ் வைத்து நடாத்தி வருகின்றது.
அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இதுவரை காலத்தில் நியமனங்களோ ஊதியங்களோ வழங்கப்படவில்லை.
கடந்த கால அரசாங்கத்தின் பிரதமரிடம் இது தொடர்பில் கலந்துரையாடி இந்த ஆசிரியர்களை அரச நியமனங்களுக்குள் உள்ளீர்க்குமாறு கோரியிருந்த நிலையில் அதற்கு அவர் சம்மதம் தெரிவித்திருந்தார்.
அதற்கான நடவடிக்கையும் எடுத்திருந்தார்.
ஆனால் நியமனங்கள் வழங்குவதற்கு முன்பே அரசாங்கம் கலைந்து புதிய அரசாங்கம் வந்துள்ளது.
புதிய அரசாங்கத்தின் அமைச்சராக உள்ளவரும் இந்து மதத்தினை சேர்ந்தவர்.
இது தொடர்பில் அவரின் கவனத்துக்கும் கொண்டுசென்றுள்ளேன்.
அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களை ஆசிரிய சேவைக்குள் உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சின் ஆலோசனைக்கூட்டத்தில் திர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் கல்வி அமைச்சுக்கு கடந்த காலத்தில் நடவடிக்கையெடுக்குமாறு பணிக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அறநெறி ஆசிரியர்களை ஆசிரிய நியமனங்களுக்குள் உள்வாங்குவதற்கான கூடிய கவனத்தினை எடுத்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
இந்து மத போதனா ஆசிரியர்களை புறக்கணித்தது அரசாங்கம்: யோகேஸ்வரன் எம்.பி
Reviewed by NEWMANNAR
on
June 02, 2015
Rating:
No comments:
Post a Comment