இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிப்பதை தமிழக மீனவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் – இல.கணேசன்
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் மத்திய அரசாங்கம் ஆழ்ந்து பரிசீலித்து வருவதாக பாரதீய ஜனதாக் கட்சி அறிவித்துள்ளது.
கழிஞ்சூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பாரதீய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் இதனைக் கூறியுள்ளார்
தமிழக மீனவர் பிரச்சினையை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பிரச்சினையாகப் பார்க்க முடியாது எனவும் அது இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையிலான தொழில் போட்டி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மீனவர்கள் கடற்றொழிலின்போது பாரம்பரிய படகுகளைப் பயன்படுத்தி வருவதாகவும் பாரதீய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்
எனினும், தமிழக மீனவர்கள் அதைவிட பல மடங்கு சக்திவாய்ந்த விசைப் படகுகளைப் பயன்படுத்தி ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிப்பதை தமிழக மீனவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக நீண்டகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குரியாவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது
வருடம் 83 நாட்கள் வீதம் மூன்று வருடங்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக தமிழக மீனவர்கள் முன்வைத்த கோரிக்கையை இலங்கை மீனவர்கள் நிராகரித்துள்ளதாகவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் இந்திய அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு இரண்டு நாடுகளினதும் அரசாங்கங்கள் முயற்சிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிப்பதை தமிழக மீனவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் – இல.கணேசன்
Reviewed by NEWMANNAR
on
June 09, 2015
Rating:

No comments:
Post a Comment