"நாட்டில் ஏற்படப்போகும் ஆட்சி மாற்றம் எமக்கு உதவப்போகின்றது முஸ்லிம்களும் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்"
நாட்டில் எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதிக்குப் பின்னர் ஏற்படப்போகும் ஆட்சி மாற்றமானது எமக்கு உதவுவதாகவே அமையப்போகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
முஸ்லிம் மக்களுடைய எதிர்காலம் மத்திய அரசாங்கத்தில் தங்கவில்லை. பிராந்திய அரசின் அதிகாரங்களைப் பெறுவதிலேயே தங்கியுள்ளது. ஆகவே தேசியக் கட்சிகளுடன் கைகோர்க்காமல் எம்முடன் இணையுங்கள் என்றும் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்தார்.
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் அறிமுகம் திருமலை சில்வஸ்டார் ஹோட்டலில் கிளைத் தலைவர் கோ.சத்தியசீலராஜா தலைமையில் நடைபெற்ற போது அதில் கலந்து உரையாற்றிய போதே அவர் மேற் கண்டவாறு கூறினார்.
இரா.சம்பந்தன் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் போக்கிலும் மனநிலையிலும் ஒருமாற்றம் தெரிகிறது.தான்விட்ட தவறுகளை அனுராதபுர கூட்டத்தில் பகிரங்கமாகவே ஒத்துக் கொண்டுள்ளார். ஏற்றுக்கொண்டுள்ள மஹிந்த தான் சர்வதேசத்துடன் ஒத்துப்போகவில்லை. அவர்களை உதாசீனம் செய்து சர்வதேச எதிர்ப்பை சம்பாதித்துவிட்டேன் என்று ஏற்றுக்கொண்டுள்ளார்.
அடுத்ததாக சிறுபான்மைச் சமூகத்தின் போக்கையும் அபிலாஷைகளையும் புரிந்து கொண்டு சமமாக நடக்கத் தவறிவிட்டேன் என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளார். புலிகளை விமர்சித்திருந்தாலும் இவ்வாறு அவர் கூறியுள்ளார் என்பதை தெரிந்துகொண்டுள்ளோம். ஆனால் தேர்தலின் பின் என்ன நடைபெறும் என்பதை நாம் இப்பொழுது கூறிவிட முடியாது.
முஸ்லிம் மக்களுக்கு நான் பகிரங்கமாக ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். மத்திய அரசாங்கத்தை நீங்கள் ஆதரிப்பதனாலோ தேசியக்கட்சியுடன் இணைந்து கேட்பதனாலோ எதிர்காலத்திலும் சரி நிகழ்காலத்திலும் சரி எவ்வித பயனையும் பெறப்போவதில்லை. 60 வருடங்களாக நாம் எமது உரிமைகளுக்காகவும் தீர்வுக்காகவும் போராடி வந்துள்ளோம். எந்தத் தீர்விற்காக நாம் போராடி வந்தோமோ? அந்தத்தீர்வை விரைவில் அடைந்தே தீருவோம். அதை யாரும் தடுக்க முடியாது.
திருகோணமலை மாவட்ட முஸ்லிம் மக்கள் அதிக குழப்பம் அடைந்து காணப்படுகின்றார்கள் என்பது எமக்குப் புரிகின்றது. இக்குழப்பத்திற்கான காரணம் என்னவென்றால்இ தங்கள் தலைவர்கள் தங்கள் உரிமைபற்றிஇ அதிகாரம் பற்றி எவ்விதம் செயற்படுகின்றார்கள் என்பது முஸ்லிம் மக்களுக்குத் தெரியாமல் உள்ளது. இது தான் குழப்பத்திற்கான காரணம். முஸ்லிம் காங்கிரஸ், மறைந்த தலைவர் அஷ்ரப் இனால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி. முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சி என வர்ணிக்கப்படும் கட்சி. அஷ்ரப்பின் தலைமையை மக்கள் ஏற்றுக்கொண்டவர்கள் .
அவரின் மறைவிற்குப்பின் நிலைமை மாறியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸுடன் நாம் சேர்ந்து ஆட்சியமைத்தமைக்கு முக்கிய காரணம் தமிழ்இமுஸ்லிம் ஒற்றுமை கட்டியெழுப்பப்படவேண்டும் காப்பாற்றப்படவேண்டும் என்பதற்காகவேயாகும்.
இரண்டு இனங்களினதும் உறவுகளும் தொடரவேண்டும். அந்த உறவு பெறுமதி மிக்கது. வடகிழக்கைப் பொறுத்தவரை தமிழ்இ முஸ்லிம் ஒற்றுமை பாதுகாக்கப்படவேண்டும். அது வளர்ச்சியடைந்து பலம் அடையவேண்டும் என்பதாகும்.
தற்பொழுது பாராளுமன்றத் தேர்தல் ஒன்று வந்திருக்கின்றது. இத்தேர்தலில் பெரும்பான்மைக்கட்சிகளுடன் முஸ்லிம் மக்கள் இணைந்து செயற்படக்கூடாது. நாம் பெரும்பான்மைக் கட்சிகளுடன் போராடுகின்றோம். ஆட்சி அதிகாரம் எமக்கு வழங்கப்பட வேண்டும்இ சுயாட்சி வேண்டும் என்று கேட்கின்றோம். எமது பிராந்தியங்களில் ஆட்சி எம்மிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்று ஜனநாயக ரீதியில் போராடி வருகின்றோம். அந்தத்தீர்வு விரைவில் வரப்போகின்றது. இதை நான் பகிரங்கமாக கூறவிரும்புகின்றேன். இவ்விதமான சூழ்நிலையில் எதற்காக ? ஏன்? முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சியுடன் சேர்ந்து போட்டியிடவேண்டும்?
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் முக்கிய வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளார். முஸ்லிம் மக்கள் அவருக்கு வாக்களிக்க விரும்பவில்லை. காரணம் அவரின் ஆட்சிக்கால கொடுமைகள். முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டபோதுஇ அவர்களுக்கு கொடுமைகள் இழைக்கப்பட்டபோது இந்த நாட்டில் சட்டம் ஒழுங்குக்குப்பொறுப்பானவர்கள் ஓடி ஒளிந்துவிட்டார்கள்.
அந்த மக்களைப் பாதுகாக்கத் தவறி விட்டார்கள். தம்புள்ளையில் நடந்த சம்பவம்,கொழும்பில், பேருவளையில், அளுத்கம ஆகிய இடங்களில் நடந்த சம்பவங்கள், கொடுமைகள் போன்றவற்றை அனுபவித்ததன் காரணமாகவே முஸ்லிம் மக்கள் மஹிந்த ராஜபக் ஷவுக்கு இன்று வாக்களிக்கவிரும்பவில்லை. விரும்பவும் கூடாது. நாம் என்ன செய்ய வேண்டுமென்று அம்மக்கள் சிந்திக்கின்றார்கள். எங்களுக்கு வாக்களியுங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள், எனக்கு வாக்களியுங்கள். உங்களை நாம் ஒரு போதும் கைவிட மாட்டோம்.
முஸ்லிம் மக்கள் சார்பாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குரல் கொடுத்திருக்கிறோம். முஸ்லிம் மக்கள் மீது பலவிதமான தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது நான் பாராளுமன்றில் இவ்விடயம் சம்பந்தமாக விசேடமான உரையை ஆற்றினேன். அப்பொழுது உங்கள் இனத்தைச் சேர்ந்த அஸ்வரும் அப்துல் காதரும் எனக்கு குறுக்கீடு செய்தார்கள்.
அவர்கள் செய்த குறுக்கீட்டைக் கேட்ட பல முஸ்லிம் மக்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் செய்த காரியத்துக்காக மன்னிப்புக் கேட்டதுடன் எனக்கு பாராட்டும் நல்கினார்கள்.
அம்மையார் நவநீதம்பிள்ளை இலங்கை வந்தபோது தமிழ் மக்களுடைய பிரச்சினை பற்றி கூறிவிட்டு, முஸ்லிம் மக்கள் படும் கஷ்டங்கள் பற்றி எடுத்துக் கூறியபோது அவர் ஒரு விடயத்தைக் கூறினார் அதாவது முஸ்லிம் மக்கள் பற்றி பேசுவதற்கும் நீங்கள் இருக்கிறீர்கள் என்று கூறினார்.எனவேதான் முஸ்லிம் மக்களுக்கு ஒரு விசேட செய்தியை விடுக்க விரும்புகின்றேன். மத்திய அரசாங்கத்தால் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. உங்கள் எதிர்காலம் பிராந்திய அதிகாரத்தின் மூலமே தங்கியுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்து செயற்படல் வேண்டும். மைத்திரியின் ஆட்சி பலமுள்ளதாக அமையாத காரணத்தினால் எல்லா விடயங்களையும் உடனடியாக நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.
ஆனால் தேர்தல் முடிந்த பிறகு எல்லாவிடயங்களும் ஒரு முடிவுக்கு வருமென நாம் நம்புகின்றோம். இருந்த போதிலும் எமது நிலைப்பாட்டை இந்த தேர்தல் மூலம் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம். தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக அதை எடுத்துக் கூறுவோம்.
எமது மக்களுடைய ஜனநாயக முடிவு என்ன- ? எமக்கு வேண்டிய அரசியல் தீர்வு என்ன? என்பது பற்றிய தெளிவான முடிவை விஞ்ஞாபனத்தில் கூறுவோம். அது மாத்திரமல்ல மக்களின் உடனடித்தேவைகள் சம்பமந்தமாகவும் அது நிறைவேற்ற வேண்டிய அவசியம், அவசரம் குறித்தும் கூறுவோம்.
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும். நிரந்தர தீர்வொன்றைக் காண்பதனூடாகத்தான் நாட்டின் நல்லிணக்கம், சமாதானம், புரிந்துணர்வு, சமத்துவம், ஒற்றுமை, ஒருமித்த நாடு என்ற கருமங்களை அடையமுடியுமென்ற நிலை ஏற்படும். தேர்தல் முடிவுகளுக்குப் பின் வல்லரசான இந்தியாவும் அமெரிக்காவும் எமது பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஏற்பட வேண்டுமென்பதில் மிகவும் உறுதியாக இருக்கின்றன.
எமக்கு சார்பாக இருக்கின்றார்கள். அவர்கள் எங்களை கைவிட முடியாது. நாட்டில் ஏற்படப் போகும் ஆட்சிமாற்றமானது எமக்கு உதவப் போகின்றது என்பது உண்மை.
இக் கூட்டத்தில் வேட்பாளர்களான க. துரைரெட்ண சிங்கம், டாக்டர் இந்திராணி, சரா புவனேஸ்வரன், க.கனகசிங்கம், க.ஜீவ ரூபன், அ.யதீந்திரா மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி ஆகி யோரும் உரையாற்றினர்.
"நாட்டில் ஏற்படப்போகும் ஆட்சி மாற்றம் எமக்கு உதவப்போகின்றது முஸ்லிம்களும் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்"
Reviewed by Author
on
July 20, 2015
Rating:

No comments:
Post a Comment