தமிழ் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதியுடன் விரைவில் பேச்சு...
கைதிகளின் குடும்பத்தினரும் ஜனாதிபதியை சந்திப்பர்
நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அர சியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பை பெற்றுக்கொடுக் கும் வகையில் அவர்கள் ஜனா திபதியை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண அமைச்சர் ப. டெனீஸ்வரன் தெரிவித்தார்.
ஐ. நா. சபை மாநாட்டில் கலந்துகொள் ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் இச்சந்திப்பை ஒழுங்கு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடியுள் ளதாகத் தெரிவித்த மாகாண அமைச்சர், டெனீஸ்வரன் பெரும்பாலும் எதிர்வரும் ஒக்டோபர் 7ம் திகதிக்குப் பின்னர் அந்த விடயம் கைகூடலாம் என்றும் தெரிவித்தார். அத்துடன் வடக்கில் தொழில் வாய்ப்பின்றி வாழும் பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் மூலம் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் ஜனாதிபதியுடன் பேசவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: சுமார் 30 வருடங்களுக்கு மேல் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
இவர்களது குடும்பங்கள் மிகவும் கஷ்டமான வாழ்க்கை நடத்துகின்றனர். யுத்தத்தினால பாதிக்கப்பட்ட நிலையில் குடும்பத்தினரில் பலர் காயங்களோடும் சிலர் அங்கவீனர்களாகவும் உள்ளனர். இவர்களது பிரச்சினைகளை அவர்கள் நேரடியாக ஜனாதிபதியிடம் தெளிவுபடுத் துவதற்கான சந்தர்ப்பமொன்றையே ஏற்பாடு செய்துகொடுக்கவுள்ளேன்.
யாழ். மாவட்டத்தில் மாத்திரம் 324 தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர் உள்ளனர். அதேபோன்று ஏனைய மாவட்டங்களிலும் பெருந்தொகையாக அவர்கள் உள்ளதால் அவர்கள் அனைவரையும் ஜனாதிபதியை சந்திப்பதற்குக் கொழும்புக்கு அழைத்து வருவதென்பது சுலபமான காரியமல்ல.
இதனை கருத்திற்கொண்டு ஜனாதிபதியை வடக்கிற்கு அழைத்து இச்சந்திப்பை மேற்கொள்வது சிறந்தது என நாம் கருதுகிறோம். இதற்கிணங்க வடக்கில் ஒரு நாளில் இச்சந்திப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இனியும் நீதிமன்றம், விசாரணைகள் என்பது சாத்தியமற்றது. அதற்குக் காலம் கடத்துவதை விடுத்து அவர்களுக்குப் பொது மன்னிப்பொன்றை வழங்க வேண்டும் என நாம் ஜனாதிபதியிடம் கோரவுள்ளோம். ஏற்கனவே இது தொடர்பில் நாம் ஜனாதிபதியுடன் பேசியுள்ளோம் என்றும் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி அவர்கள் விரைவில் கிளிநொச்சிக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிய முடிகின்றது. அச்சந்தர்ப்பத்தில் இச்சந்திப்பை ஏற்பாடு செய்ய முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதியுடன் விரைவில் பேச்சு...
Reviewed by Author
on
September 23, 2015
Rating:
Reviewed by Author
on
September 23, 2015
Rating:


No comments:
Post a Comment