வதை முகாமின் இறுதித் தீர்ப்பு: சிலர் விடுதலை! பலர் அழுகை
வதை முகாமில் ஒரே சித்திரவதை. வீட்டில், வெளியில் என சித்திரவதையின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தது.
பாடசாலையில் ஆசிரியர், அதிபர் ஆகியோரின் “படி” “படி” என்ற அழுத்தம். வீட்டில் பெற்றோரின் அதட்டல். பிஞ்சு உள்ளங்களின் ஏக்கம்; ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனிடையே சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, கார்த்திகை விரதம் போல தனியார் கல்வி நிறுவனங்களில் நடக்கும் மகா தீட்சை. பத்தே வயதான பிஞ்சுகளின் மனங்களை வதைத்து வறுத்து இனிமேல் கல்வியில் ஆசை கொள்ளாதே என்று உயில் எழுதுவது போல எல்லாம் நடந்து முடியும்.
பத்தே வயதான சிறுவர்களை, உச்சமாக வதைப் பதற்காக இந்த நாட்டின் மகா மேதைகள் ஒன்று கூடி 200 புள்ளிகள் கொண்ட இரண்டு வினாத்தாள்களை தயாரிப்பர். அன்றுதான் அந்தப் பிஞ்சுகளுக்கான கவுணாவத்தை வேள்வி நடைபெறும்.
அது மகா வேள்வியாக இருந்தாலும் எல்லாப் பாரத்தையும் இறக்கி வைக்கின்ற நாள் என்பதால், அந்தப் பாலகர்களுக்கு அது திருப்பதியாக இருக்கும். எனினும் மகா வேள்வியின் முடிவு வரும் வரை ஏக்கம் வதைக்கும். திடீர் திடீர் கனவுகள் வந்து போகும். கடவுளே! இந்தப் படிப்பு வேண்டாம் என்று அந்தப் பச்சிளம் உள்ளங்கள் பதை பதைக்கும்.
ஆம், அந்த முடிவுகளுக்கான காத்திருப்பு முன்னைய வதைகளை விட மோசமானது. ஒரு நாள் நடு நிசியில் கணனிகள் தட்டி எழுப்பும். இணையத்தில் வதைபட்டோர், விடுதலை பெற்றோர் பட்டியல் இடம்பெற்றிருக்கும்.
இதனிடையே வேள்வி நடந்த சிறுவர்களின் வீடுகளில் தொலைபேசி ஓய்வின்றி ஒலி எழுப்பும்.
என்ன சங்கதி! நடுச்சாமத்தில் அந்த வீடுகளில் ஒரே ஆரவாரம். ஒரு வீட்டில் அழுகுரல் கேட்கிறது. மறுவீட்டில் மகிழ்ச்சி ஆரவாரம். இருந்தும் திருப்தியில்லாத் திண்டாட்டம்.
அந்தோ! என்னவோ! ஏதோ! என்ற ஏக்கத்தோடு முதுமைகள் வாழும் வீட்டில் உறக்கம் கலைந்து, குலைந்து போகும்.
மறுநாள் விடியற்பொழுதில் பல பாடசாலைகளில் கறுப்புக்கொடி கட்டாத துக்கம் அனுஷ்டிப்பு.
சில பாடசாலைகளில் வெற்றிக் கொடி நாட்டாத வெற்றி விழாக் கொண்டாட்டம்.
இதனிடையே கல்வித் திணைக்களப் பொதிக ளுடன் தபால்கந்தோரின் பணி தொடரும்.
70க்கு கீழ்; 70க்கு மேல்; 100க்கு மேல்; சித்தி; சித்தியின்மை; இலை; மரம் அடேங்கப்பா வதை முகாமில் நடந்தவை அறிக்கைப்படுத்தப்பட்டு பெரிய பெரிய திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
வதை முகாமில் அடிபட்டு, உதைபட்டு, திட்டுகள் எல்லாம் தாங்கி சித்தி என்ற பேறு பெற்றோர் துன்பம் என்னும் சுமையில் இருந்து விடுபட்டனர்.
மற்றவர்கள் வாழ்நாள் பூராகவும் துன்பப்பட்டு, துயரப்பட்டு அணிவதையே தம் தலைவிதியாக்கிக் கொள்வர். என் செய்வோம்! தரம் ஐந்து மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சை, அதற்கான தயார்ப் படுத்தல், பெறுபேற்றுக்கான காத்திருப்பு, பரீட்சைப் பெறுபேற்றின் முடிபு.
இவைதான் நம் வீடுகளில் 10 வயதுப் பாலகர்களை வதை செய்யும் கொடுவதை முகாம்.
ஐ.நா அறியாத இந்த வதை முகாமை அழிக்க வல்லார் யாரோ! யாம் அறியோம் பராபரமே.
வலம்புரி ஆசிரியர் தலையங்கம்-
வதை முகாமின் இறுதித் தீர்ப்பு: சிலர் விடுதலை! பலர் அழுகை
Reviewed by NEWMANNAR
on
October 08, 2015
Rating:

No comments:
Post a Comment