கடவுளுக்கும் காவலாளிகள் தேவையா? : அரியநேத்திரன்...
இன்று நல்லாட்சி இடம்பெறுவதாக கூறப்படும்போது இந்து ஆலயங்களுக்கும் கடவுளுக்கும் காவலாளிகள் தேவையாகவுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள் கடந்த வெள்ளிக்கிழமை உடைத்து சேதமாக்கப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர்மேலும் கூறுகையில்,
குருக்கள்மடம் விஷ்னு ஆலயத்திலும் வாகனேரி இத்தியடி விநாயகர் ஆலயத்திலும் உள்ள விக்கிரகங்கள் திட்டமிட்டு சில விசமிகளால் சேதப்படுத்தப்பட்ட செயலானது ஒட்டுமொத்த இந்து மக்களின் மனதை புண்படுத்தும் செயலாகும்.
ஏற்கனவே மஹிந்ந அரசின் காலத்தில்
குருக்கள்மடம் முருகன், ஆலயம் மாங்காடு பிள்ளையார் ஆலயம் மற்றும் பல ஆலயங்களில் விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டன. இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் இவ்வாறான திட்டமிட்ட செயல்களை செய்தவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கூறிய போதும் அது தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் மஹிந்த அரசால் முன்னெடுக்கப்படவில்லை.
இதனை கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் மட்டக்களப்பு மாங்காட்டில் இருந்து குருக்கள்மடம் வரையும் கவனஈர்ப்பு ஊர்வலத்தையும் நடாத்தினோம்.
ஊர்வலத்தை தடுக்கும் நடவடிக்கையை முன்னைய மஹிந்த அரசு படையினரை கொண்டு தடுக்கமுற்பட்டதே தவிர ஆலயத்தில் விக்கிரகங்களை உடைத்த எவரையுமே கைது செய்யப்படவில்லை.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஐனாதிபதியாக மைத்திரி அரசு பதவியேற்று நல்லாட்சியென வாயால் மட்டும் கூறும் இந்த சொல்லாட்சி அரசிலும் இந்துக் கோயில்களின் விக்கிரகங்கள் உடைக்கப்படுவதானது இந்துக்களை ஆத்திர மூட்டச் செய்கிறது.
சூத்திரதாரிகளை கைது செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. இதை அரசும் சம்பந்தப்பட்ட பொலிசாரும் உடனடியாக செய்யவேண்டும்.
அப்படி செய்யாவிட்டால் கடவுளுக்கும் காவலாளிகளை நியமிக்கவேண்டுமோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது எனவும் கூறினார்.
கடவுளுக்கும் காவலாளிகள் தேவையா? : அரியநேத்திரன்...
Reviewed by Author
on
October 26, 2015
Rating:

No comments:
Post a Comment