தரமற்ற ஐஸ்கிரீம் விற்பனை மோசடி கண்டுபிடிப்பு
சம்மாந்துறை பிரதேச செயலாளர் முகம்மது ஹனீபாவின் வேண்டுகோளுக்கிணங்கவும், சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நௌஷாத் முஸ்தபாவின் வழிகாட்டலின் கீழும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5,000 ரூபா பெறுமதியான விசேட நத்தார் பொதிகள் விநியோகிக்கப்படும் விற்பனை நிலையங்கள் வெள்ளிக்கிழமை (19) சுகாதாரப் பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இச்சோதனை நடவடிக்கையின் போது பாரிய உணவுப் பாதுகாப்பு மோசடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாகப் பழுதடைந்த ஐஸ்கிரீம்களை, உற்பத்தி நிறுவனத்திடம் மீள ஒப்படைப்பதாகக் கூறி அதற்கான பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொண்டு, அதே ஐஸ்கிரீம்களை மோசடியான முறையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்தமை இதன்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நுகர்வுக்கு உதவாத நிலையில் காணப்பட்ட அனைத்து ஐஸ்கிரீம்களும் நீதிமன்ற அனுமதியுடன் உடனடியாக அழிக்கப்பட்டன. மக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட, சம்மாந்துறையில் இயங்கும் அரச சார்பு விற்பனை நிலையம் ஒன்றுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, நிலையத்தின் பொறுப்பாளர் 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் சுகாதாரப் பிரிவு எந்தவித சமரசமும் இன்றி தொடர்ந்து கடுமையாகச் செயலாற்றும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தரமற்ற ஐஸ்கிரீம் விற்பனை மோசடி கண்டுபிடிப்பு
Reviewed by Vijithan
on
December 20, 2025
Rating:
Reviewed by Vijithan
on
December 20, 2025
Rating:


No comments:
Post a Comment