நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறிய 413 பேரிடம் 869,500 ரூபா அறவீடு...
2015 டிசம்பர் மாதத்தில் மத்திய மாகாணத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறிய 413 வர்த்தகர்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் மூலம் நீதிமன்றங்களால் தண்டப் பணமாக 869,500 ரூபா அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.நஸீர் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையிலான ஒரு மாத காலத்தில் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளால் தீடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறிய வர்த்தகர்கள் கண்டி மாவட்டத்தில் 247 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 84, வர்த்தகர்களும் நுவரெலியா மாவட்டத்தில் 87 வர்த்தகர்களும் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு எதிராக பாவனைப் பொருட்களின் விலைப் பட்டியல்கள் காட்சிக்கு வைக்கப்படாமை, காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை, விற்பனை . செய்தமை, நிர்ணய விலைகளை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல், எஸ்.எல்.எஸ். தரச்சான்று அடையாளமற்ற பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை, பழைய பொருட்களை குறிப்பிட்ட விலைகளில் மாற்றம் செய்து அதிக விலைகளுக்கு விற்பனை செய்தல் போன்ற குற்றச்சாட்டுகளின்பேரில் மூன்று மாவட்டங்களிலும் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டன.
இவ்வழக்குகளின் விசாரணைகளின் போது பலர் குற்றச் சாட்டுகளை ஒப்புக் கொண்டனர் சிலர் நீதிவானின் விசாரணைகளில் குற்றவாளிகளாக காணப்பட்டனர்.
இதனையடுத்து இவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன்படி கண்டி மாவட்டத்தில் 247 வர்த்தகர்களிடமிருந்து 413,000 ரூபாவும் மாத்தளை மாவட்டத்தில் 84 வர்த்தகர்களிடமிருந்து 162,000 ரூபாவும் நுவரெலியா மாவட்டத்தில் 87 வர்த்தகர்களிடமிருந்து 294,500 ரூபாவும் அபராத தொகையாக அறவிடப்பட்டுள்ளது என்றும் உதவிப் பணிப்பாளர் நஸீர் மேலும் தெரிவித்தார்.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறிய 413 பேரிடம் 869,500 ரூபா அறவீடு...
Reviewed by Author
on
January 05, 2016
Rating:

No comments:
Post a Comment