மன்னார் வரலாற்று புகழ் மிக்க திருக்கேதீஸ்வரத்தில் வழமைபோன்று இம்முறையும் சிவராத்திரி விழா-07-03-2016
மன்னார் வரலாற்று புகழ் மிக்க பாடல்தலமான திருக்கேதீஸ்வரத்தில் வழமைபோன்று இம்முறையும் சிவராத்திரி விழா.
வழமைபோன்று இம்முறையும் மன்னார் பாடல்தலமான திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரி விழா நடைபெறும் என மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆலயம் புனரமைக்கப்படுவதால் இம்முறை திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரி விழா நடைபெறமாட்டாது .
என்ற வதந்தியை நம்பவேண்டாம் என பக்தர்களுக்கு ஊடகங்கள் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
எதிர்வரும் 7ந் திகதி (07.03.2016) நடைபெற இருக்கும் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மன்னார் பாடல்தலமான திருக்கேதீஸ்வர கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒழுங்குகள் சம்பந்தமாக மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய் கிழமை (16.2.2016) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீ மெல் மன்னார் மாவட்ட உதவி செயலாளர் வீ.பாபகரன் திருக்கேதீஸ்வர கோவில் இணைச்செயலாளர் புலவர் அ.திருநாவக்கரசு இணைப்பொருளாரர் எஸ்.எஸ்.இராமகிருஷணன் இணை உப தலைவர் வைத்திய கலாநிதி எஸ்.கதிர்காமநாதன் அரங்காவல் சபை தலைவர் சு.பிரிந்தாவணன் உட்பட திணைக்கள அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
இவ் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாவது தற்பொழுது இந்திய அரசின் நிதியுதவியுடன் திருக்கேதீஸ்வர ஆலய புனரத்தான வேலைகள் நடைபெற்று வருவதால் இம்முறை சிவராத்திரி விழா நடைபெறாது என வதந்திகள் நிலவுவதாகவும் இதில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டது.
வருடந்தோறும் நடைபெறுவது போன்று இம்முறையும் சிவராத்திரி விழா மன்னார் பாடல்தலமான திருக்கேதீஸ்வர கோவிலில் வழமையான ஒழுங்குக்கு அமைய நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
சென்ற வருடத்தைப்போன்று இம்முறையும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவைகள் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் எனவும் இரு பகுதியினரிடமிருந்தும் சுமார் 90 க்கு மேற்பட்ட உள்ளூர் பஸ்சேவைகளும் மற்றும் வெளியூர் சேவைகளும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ரயில்சேவைகள் நடைபெறுவதால் புகையிரதம்மூலம் அதிகமான பக்தர்கள் கூட்டம் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதால் புகையிரத நிலையத்திலிருந்தும் போக்குவரத்து சேவைகள் மேற்கொள்ளப்படுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆலய வீதி மற்றும் உள்ளக வீதிகளை சீர்செய்யப்பட வேண்டுமெனவும் இருமருங்கும் உள்ள பற்றைக்காடுகளும் அகற்றப்படவேண்டும் எனவும் ஆலய நிர்வாகத்தினால் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கு பதிலளித்த குறித்த திணைக்கள தலைவர்கள் அவ்வேலையினை நிறைவேற்றுவதாக தெரிவித்தனர்.
ஆலய வசந்த மண்டபத்தில் தேவாரம் ஓதுதல் சொற்பொழிவு மற்றும் பஐனை முதலான நிகழ்வுகள் மட்டுமே நடத்துவதெனவும் நடன நிகழ்வுகள் நடத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
மின்சார வசதிகள் செய்வதற்காக மூன்று இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் ஆலய நிர்வாகம் இடங்களை அடையாளப்படுத்தியதும் அவைகளை உடன் செய்து கொடுக்கப்படும் என மின்சார சபை அதிகாரியினால் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு குடிநீர் சுகாதாரம் உணவு பாதுகாப்பு சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ப்பட்டன.
கடந்த ஆண்டு திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரியை முன்னிட்டு ஒழுங்குகள் திறம்பட இடம்பெற்றமைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அரச அதிபருக்கும் திருக்கேதீஸ்வர கோவில் இணைச்செயலாளர் புலவர் அ.திருநாவக்கரசு நன்றி தெரிவித்ததுடன் இம்முறையும் இது சிறப்புடன் நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் வரலாற்று புகழ் மிக்க திருக்கேதீஸ்வரத்தில் வழமைபோன்று இம்முறையும் சிவராத்திரி விழா-07-03-2016
Reviewed by Author
on
February 18, 2016
Rating:

No comments:
Post a Comment