அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத்தர கோரி எதிர்கட்சி தலைவருக்கு கடிதம் அனுப்பி வைப்பு.



இந்திய இலுவைப்படகுகள் வட பகுதி கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபடுவதினால் வக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு கோரி எதிர்க்கட்சித்தலைவரும்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களுக்கு வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம். ஆலம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடித்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,


எதிர்வரும் வெள்ளிக்கிழமை(5-2-2016) இலங்கை வரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அவர்கள் இலங்கை, இந்திய கூட்டு ஆணைய கூட்டத்தில் இரு தரப்பு மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாக ஊடகங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

இலங்கை வரும் இவர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் எதிர்கட்சித் தலைவர் ஆகNயொரை சந்திக்க உள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.

அவர் இச்சந்திப்புக்களின் போது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் தொழில் செய்யும் வேண்டு கோளினை முன்வைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.

இலங்கை அரசானது தனது அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்ள சில விட்டுக்கொடுப்புடன் நடந்துகொள்ளக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது.

தமிழ் தலைவர்களான தங்களிடமும் இவ்வேண்டுகோள் முன்வைக்கப்படலாம்.

ஆனால் இந்திய மீனவர்களால் பாதிக்கப்படும் சமூகமாக வடபகுதி மீனவர்கள் உள்ள நிலையில் தொடர்ச்சியாக தங்கள் இழப்புகளை தங்களிடம் முறையிட்டு வந்துள்ளனர்.

இதற்கமைய தாங்கள் வட பகுதி மீனவ பிரதிநிதிகளை கௌரவ ஜனாதிபதியுடன் சந்திப்பை கடந்த வருடம் ஏற்படுத்தி வடபகுதி மீனவர்களின் பிரச்சினைகளை அவர் அறியச்செய்தீர்கள் மேலும் நாடாளுமன்றத்தில் இது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டீர்கள். ஒன்றை ஏற்பாடு செய்துள்ளீர்கள்.

இதற்கு மேலதிகமாக வெளிநாட்டுப் படகுகள் கையாளும் திருத்தச்சட்டத்தினை அமைச்சரவையிலும் நாடாளுமன்றத்திலும் சமர்ப்பித்துள்ளீர்கள். இது விரைவில் சட்டமாக இயற்றப்பட உள்ளது. இவ்வாறான தங்கள் நடவடிக்கைகளை வரவேற்கும் அதே வேளை இந்திய வெளியுரவுத்துறை அமைச்சருடனான சந்திப்பில் வடபகுதி மீனவர்கள் படும் துன்பங்களையும் அவர்களின் தொழில் இழப்புகளையும் தெளிவுபடுத்துமாறு வடபகுதி மீனவர்கள் சார்பாக கேட்டுகொள்கிறோம். இதற்கு மேலதிகமாக கீழ்காணும் தகவல்களை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

இலங்கையில் இடம் பெற்ற ஆயுத போராட்டத்திற்கு பிற்பட்ட காலப்பகுதியில், வட மாகாணப் பொருளாதாரம் மெதுவாக மீண்டெழுந்து வருகின்றது. அதன்படி, 2011 ஆண்டு முதல், நாட்டில் உள்ள ஒன்பது மாகாணங்களின் அதிஉயர் பொருளாதார வளர்ச்சி கொண்ட மாகாணமாக வட மாகாணம் காணப்படுகின்றது. இருந்தபொழுதும் மீன்பிடி உபதுறையின் வளர்ச்சியானது இந்திய (தமிழ்நாடு) மீனவர்களின் அத்துமீறல்களினால் வடபகுதி மீனவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை, இந்திய மீனவர்கள் பாக்ஜலசந்தி, பாக்கு நீரிணை, மன்னார் வளைகுடா போன்றவற்றில் காலாகாலமாக அன்னியோன்யமாக பாரம்பரிய மீன்பிடி முறைகள் மூலம் மீன்பிடித்து வந்துள்ளனர். ஆனால் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளினால் செய்யப்படும் தொழிலின் வீரியமான அறுவடை காரணமாக கடல்வாழ் உயிரினங்கள் அருகிப் போய்க்கொண்டு வருகின்றது. ஆனால் வடபகுதி மீனவர்கள் 1983ம் ஆண்டு ஆரம்பித்த சிவில் யுத்தத்தின் பாரிய பாதுகாப்பு கெடுபிடிகளினால் தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்த முடியாது போனது. இதன் காரணமாக இலங்கைக்கு உரித்தான பாக்குஜல சந்தியில் அதிகமான கடல் வாழ் உயிரினங்கள் இந்திய மீனவர்களால் கொண்டு செல்லப்படுகின்றன.


தமிழ்நாட்டில் வர்த்தக ரீதியிலான மீன்பிடித்தல் (றோலர், வள்ளம்) அதிகரித்துவரும் அதேவேளை, வட இலங்கையில் பாரம்பரிய முறையான மீன்பிடித்தலே இன்னமும் இருந்து வருகின்றது. இதன் காரணமாக, இழுவைப்படகுகள் மூலமான அத்துமீறல்கள் வட இலங்கை மீனவர்களுக்கு வாழ்வாதார இழப்புக்களை தோற்றும் அதேவேளை தமிழ்நாட்டு வர்த்தக ரீதியிலான மீன்பிடித்தலை வளம்பெறச் செய்கிறது. இங்குதான் இழுவைப்படகுகளின் அத்துமீறல்கள் இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையே சமத்துவம் அற்ற தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இலங்கைக் கடற்பரப்பில் தமிழ்நாட்டு இழுவைப் படகுகளில் சட்டவிரோதமான மீன்பிடி இலங்கை மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தின்மேல் ஒரு அழிவுதரும் விளைவைக் கொண்டிருக்கின்றது. மேலும் கடற்றொழில் துறை மற்றும் இலங்கையின் கடலுணவுத்துறைக்கு கடுமையான பாதிப்பை உண்டாக்குகின்றது.

இத் துன்பங்கள் போதாதென்று இயற்கையின் சீற்றத்தினால் இப்பகுதி மீனவர்கள் பல இடர்பாடுகளை அனுபவித்து வருகின்றனர். பொருளாதார ரீதியிலும் அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைந்து வந்த எமது மீனவ சமூகமானது மேற்குறிப்பிட்ட அனைத்து செயற்பாடுகளினாலும் மறைமுகமான ஒரு தாக்கத்தை அனுபவித்துக் கொண்டிருப்பது தான் தற்போதைய உண்மையான நிலையாகும்.

வடபகுதி மீனவர்கள் பல்வேறுபட்ட காரணிகளால் வாழ்வை தொலைத்து இன்னும் அதனை தேடுபவர்களாக உள்ளனர். அவர்கள் மீண்டுவர இலங்கை மத்திய அரசு மற்றும் மாகாண அரசுகள் வசதிகளையும், வழிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். உயிர்வாழ ஆதாரமான வாழ்வாதாரத்தை அவர்கள் யாரிடமும் கையேந்தாமல் சுயமாக கௌரவத்துடன் உழைத்து வாழவே விரும்புகின்றனர். இதற்கு தடைக்கல்லாக இருக்கும் விடயங்களை அகற்றி இவர்கள் வாழ்வு சிறப்பிக்க சம்மந்தப்பட்டவர்கள் உதவிடவேண்டும்.


01. வாழ்வாதாரங்கள் :-

இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக தமிழ்நாட்டு இழுவைப்படகுகள் மீன்பிடிப்பதால் ஒவ்வொரு கிழமையும் மூன்று நாட்களுக்கு மீன்பிடிப்பதிலிருந்து 50,000 க்கும் மேலான மீனவர்கள் தடுக்கப்படுகின்றனர். இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக தமிழ்நாட்டு இழுவைப்படகுகள் மீன்பிடிப்பதால் ஒவ்வொரு மீனவரும் ஒரு ஆண்டுக்கு ரூபா (200,000) இரண்டு இலட்சம் முதல் (400,000) நான்கு இலட்சம் வரை வருமானத்தை இழக்கின்றனர். வடமாகாணத்தில் (200,000) இரண்டு இலட்சம் மக்களுக்கு மேல் தங்கள் வாழ்வாதாரத்துக்கு மீன்பிடித் தொழிலிலேயே தங்கியுள்ளனர். மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் வாழும் பெரும்பாலான இந்த மீனவ குடும்பங்கள் 30 வருட சிவில் யுத்தத்திலிருந்து தற்போது மீண்டு வருகின்றனர்.



02. கடல்சார் உற்பத்தி :-

ஒவ்வொரு கிழமையும் தமிழ் நாட்டு இழுவைப் படகுகளால் இலங்கைக் கடற்பரப்பில் 600 மெற்றிக் தொன் அல்லது அதற்குமேல் இலங்கைக் கடலுணவு சட்டவிரோதமாக அறுவடை செய்யப்படுகின்றது. வருடாந்தம் 20,000 முதல் 30,000 மெற்றிக் தொன் கடலுணவு தமிழ் நாட்டிற்கு கொண்டு செல்லப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் 5,000 மெற்றிக் தொன் வரையிலான இறால், நண்டு, கணவாய் என்பன இந்திய கடலுணவு என்ற விவரத்தாளுடையதாக இந்திய கடலுணவுக் கம்பனிகளால் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

03. பொருளாதாரம் :-

இலங்கைக் கடற்பரப்பில் தமிழ்நாட்டு இழுவைப் படகுகளால் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது காரணமாக கடற்றொழில்துறைக்கு சேவை செய்யும் சிறிய வியாபாரங்களுக்கான கேள்வி மறுக்கப்படுகின்றது. இலங்கை கடலுணவு உற்பத்தியாளர்கள் உற்பத்திக் கொள்ளளவு ஆற்றலுக்குக் கீழேயே உற்பத்திசெய்கின்றனர். இந்தத் துறையில் முதலீட்டுக்கான ஊக்கம் குறைவு என்பதுடன் இலங்கைக் கடற்பரப்பில் தழிழ்நாட்டு இழுவைப் படகுகளால் சட்டவிரோத மீன்பிடித்தல் காரணமாக தொழில் வாய்ப்புகளும் மட்டுப்படுத்தப்படுகின்றன. இலங்கைக் கடற்பரப்பில் தமிழ்நாட்டு இழுவைப்படகுகளின் சட்டவிரோத மீன்பிடித்தலின் காரணமாக, இலங்கை கடலுணவுத் துறையால் ஒவ்வொரு வருடமும் பத்து முதல் இருபது மில்லியன் டொலர்கள் இழக்கப்படுகின்றன. இந்த நேரடி பணயியல் இழப்புக்களுக்கு மேலதிகமாக மறைமுக இழப்பீடுகளும் உள்ளன. இதன்படி மொத்த. சில்லறை மீன் வியாபாரிகள். பதனிடும் பணியாளர்கள். ஏற்றுமதியாளர்கள் என உள்ள மீன்பிடி உபதுறையின் நிரம்பல் தொடரில் உள்ளோருக்கும் இழப்புகள் உள்ளன.

04. சூழல் :-

இயந்திர அடி இழுவைப்படகு மீன்பிடித்தல் ஒரு அழிவுதரும் மீன்பிடித்தல் முறையாகும். இழுவைப்படகுகள் தான்செல்லும் பாதையிலுள்ள எல்லா கடல்சார் உயிரினங்களையும் துடைத்தெடுத்துக்கொண்டு செல்கின்றன. பிடிபடுபவையில் 15மூ க்கும் குறைவானவையே இறால், நண்டு, மீன் போன்ற வர்த்தகரீதியான பெறுமதிவாய்ந்த வகைகளாக உள்ளன. பிடிபவையில் 85மூ ஆனவை வர்த்தக ரீதியான பெறுமதியற்ற வகைகள் மற்றும் இளம்பிராயத்தைச் சேர்ந்தவையாகும். இவை உள்ளூரில் விற்கப்படுகின்றன. அல்லது இறந்த நிலையில் கடலுக்குள் திரும்பவும் வீசப்படுகின்றன. இயந்திர அடி இழுவைப் படகு மீன்பிடித்தல் கடல் புற்படுக்கை, சேற்று மேடுகள், பாறைப் பவளங்கள் மற்றும் பவளங்கள் போன்ற பிரதான கடல்சார் வாழ்வனவையும் பாதிப்படையச் செய்து அழிக்கின்றன.


கீழ்கானும் விடயங்களை தங்களின் கவனத்துக்கு முன் வைக்கின்றோம்.

01. இந்திய இழுவைப்படகுகள் எமது கடல் பகுதிக்குள் நுழைந்து தொழில் செய்கின்றமை.
02. போரின் வடுக்களிலிருந்து மீன்ட மக்கள் கடலில் சுதந்திரமாக தொழில் செய்ய முடியாமை.
03. மீன் இனங்கள் வாழ்வதற்கு இயற்கையால் வழங்கப்பட்ட முருகைகற்பாறைகள் மற்றும் பவளப்பாறைகள் அழிக்கப்படுவதால் எதிர் கால சந்ததியினருக்கு வளங்கல் இல்லாமல் போகின்றமை.
04. பல லட்சம் ரூபா பெறுமதியான வலைகள் மீன் பிடி உபகரணங்கள் இவ் இழுவைப்படகுகளினால் இழுத்து செல்லப்பட்டு நாசமாக்கப்படுகின்றமை.
05. எமது கரையோரப் பகுதிகளில் இவ் இழுவைப்படகுகள் தொழிற் செய்வதால் சிறு மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றாக இழக்கின்றமை.
06. கடல் தாவரம் அழிக்கப்படுவதால் மீன்களுக்கும் குஞ்சுகளுக்கும் தேவையான உணவு அதற்கான பாதுகாப்பும் இல்லாமல் செய்யப்படுகின்றமை.
07. எமது மீனவர்கள் எமது கடற்பரப்பில் தொழிற் செய்ய முடியாமை.

இந்திய மீனவர்களின் அத்து மீறிய செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். எமது கடல் வளத்தை எமது மீனவர்கள் அனுபவிக்க வாரத்தில் அனைத்து நாட்களும் தொழில் புரிவதற்கு ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும். அத்தோடு வடமாகாண சபையானது இந்திய அரசுடன் எமது பகுதியின் அபிவிருத்தி தொடர்பாக நல்லுறவை கட்டியெழுப்ப வேண்டும் அதனோடு எமது பகுதி மீனவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் செயற்படவேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் நிருபர்

வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத்தர கோரி எதிர்கட்சி தலைவருக்கு கடிதம் அனுப்பி வைப்பு. Reviewed by NEWMANNAR on February 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.