தமிழ் மக்கள் பேரவையை பேரலை என முதல்வர் கூறியது ஏன்?
தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டு நான்கு மாதங்கள் மட்டுமே நிறைவேறியிருக்கும் வேளையில் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன் மொழிவின் இறுதி வடிவத்தை பேரவை நிறைவு செய்துள்ளது.
பேரவை ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை மாதங்களுக்குள் தீர்வுத்திட்ட முன்வரைபு ஒன்றைத் தயா ரித்து அதனை வெளியிட்டதுடன் அத் தீர்வுத்திட்ட வரைபை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று பொதுமக்களின் கருத்துக்களைப் பதிவு செய்து கொண்டமை ஈழத்தமிழ் மண்ணில் இதுகாறும் நடக்காத நிகழ்வு எனலாம்.
பொதுமக்களின் கருத்துகளைப் பதிவு செய்து கொண்ட தமிழ் மக்கள் பேரவையின் அரசியல்துறை நிபுணர் குழுவானது மக்களின் கருத்துக்களையும் உள்வாங்கி தீர்வுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு அதனை பேரவைக்குச் சமர்ப்பித்தது.
இந்த நிகழ்வு கடந்த 10ஆம் திகதி யாழ்ப்பாண பொதுநூலகத்தில் இடம்பெற்றது. தீர்வுத்திட்டத்தின் இறுதி முன்மொழிவு தொடர்பில் ஆராய்ந்த பேரவையும் தனது கருத்துக்களைப் பதிவு செய்து தீர்வுத்திட்ட முன்மொழிவை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.
இதன்போது தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும் வடக்கின் முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் அங்கு உரையாற்றுகையில்,
தமிழ் மக்கள் விழித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதற்கு அடையாளமே தமிழ் மக்கள் பேரவை என்ற பேரலை தான்.இது சுனாமி போன்ற அலை அல்ல. தமிழ் மக்கள் பேரவை என்ற பேரலை உதயமாகியுள்ளதால் எமது மக்கள் உண்மையை உணரத் தொடங்குவார்கள்; எமது பாரம்பரியங்கள் பற்றி அறியத் தொடங்குவார்கள்; எமது இலட்சியங்களை பாதுகாக்க முன்வருவார்கள்; ஒற்றுமைக்கு வித்திடுவார்கள்.
இந்தப் புனித கைங்கரியத்தில் தமது நேரகாலங்களை, பணத்தை, பல்வித சுகங்களை தியாகம் செய்து எமக்கென தீர்வு ஒன்றினை அடையாளப்படுத்திய தீர்வுத்திட்ட உப குழுவினர் பாராட்டப்பட வேண்டியவர் என்றும் குறிப்பிட்டார்.
இங்குதான் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் பேரவையை பேரலை என்று கூறியதற்கான காரணம் உள்ளடங்கியுள்ளது.
தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியல் கட்சி அல்ல. அது ஒரு மக்கள் இயக்கம்; மக்கள் ஒன்றுபட்டுவிட்டால் அவர் இங்கு குறிப்பிட்ட அனைத்து சாத்தியமாகும்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் தமிழ் மக்கள் பேரவையை வலுவாக ஆதரிக்கின்றனர்.தமிழ் மக்கள் பேரவையானது பேரலையாக அவ்வப்போது எழுந்து தீயவர்களுக்கு நஞ்சையும் நல் லவருக்கு அமிர்தத்தையும் அள்ளிக் கொடுக்கும்.
அந்தப் பேரலை கடல் அலை போல் ஓய்வதில்லை அதன் பணி தொடர்ந்து கொண்டே இருக்கும் இதைத்தான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் பேரவையை பேரலை என்று விழித்துக் கூறினார்.
அவர் முன்னின்று நடத்தும் அமைப்பு அல்லவா! பேரவை. நிச்சயம் அது தமிழர்களுக்கு விடிவைத் தரும் என்று நம்பலாம்.
தமிழ் மக்கள் பேரவையை பேரலை என முதல்வர் கூறியது ஏன்?
Reviewed by NEWMANNAR
on
April 13, 2016
Rating:

No comments:
Post a Comment