அண்மைய செய்திகள்

recent
-

சிறுபான்மை தலைமைத்துவங்கள் ஒன்றிணைந்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்: ஹக்கீம்...


சிறுபான்மை சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் என்ற அடிப்படையில் அனைத்து தலைமைகளும் ஒன்றிணைந்த நிலைப்பாடு என்பது மிகவும் முக்கியமானது ஆகும்.

இது தொடர்பில் தீவிரமாக சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் தெளிவுபடுத்துவதோடு, அதில் உள்வாங்குவதற்காக கருத்தறியும் முழுநாள் செயலமர்வொன்றை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று மட்டக்களப்பில் நடாத்தியது.

போயா விடுமுறையான இன்றைய தினம் நடைபெற்ற இச் செயலமர்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், குறிப்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உயர் பீட உறுப்பினர்கள் ஆகியோர் மட்டுமல்லாது, அழைப்பின் பேரில் புத்திஜீவிகள் சிலரும், சமூக ஆர்வலர்களும் பங்குபற்றி கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்தச் செயலமர்வில் 'அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகளும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம்' என்ற தலைப்பில் தலைவர் அமைச்சர் ஹக்கீமும்,

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையிலிருந்து வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற மீயுயர் தன்மையை மீளமைத்தல், எண்ணிக்கையில் சிறிய சமூகங்களின் அரசியல் நோக்கு என்ற தலைப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனும் உரையாற்றினர்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். ஹக்கீம், கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ் ஆகியோரும் இதன்போது உரையாற்றினர்.

இதன்போது, புதிய அரசியலமைப்பில் எந்தெந்த முக்கிய அம்சங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றியும்,

எவ்வாறான ஆக்கபூர்வமான அபிப்பிராயங்களை உள்வாங்கலாம் என்பது பற்றியும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் ,

தேசிய அரசாங்கம் என்று தெரிவிக்கப்படுகின்றபோதிலும் அதில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளும் தங்களை தனித்துவக்கட்சியாக ஆட்சியமைப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலேயே செயற்பட்டு வருகின்றது.

அதுதொடர்பில் இரண்டு கட்சிகளும் போட்டிபோட்டு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது.

விடுதலைப்புலிகளின் போராட்டமும் சமாந்தரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த சூழலில் தீர்வு தொடர்பில் குழறுபடிகளும் குழப்பங்களும் தோற்றம்பெற்றது.

2002ஆம் ஆண்டு தொடக்கம் ஐ.தே.க.கட்சி அரசாங்கத்தில் அங்கமாக இருந்தபோது மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் மற்றும் இடைக்கால நிர்வாகம் தொடர்பான பரிந்துரைகளில் ஈடுபட்டிருந்த காலத்தில் முஸ்லிம்களின் தனித்தரப்பாக நாங்கள் விடுதலைப்புலிகளுடன்பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம்.

இதனை எமக்கு எதிரான கட்சிகள் ஊடகங்களில் பயன்படுத்திக் கொண்டாலும் இந்த நாட்டில் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்கும்போது நாங்கள் எடுத்த நடவடிக்கைகளை பட்டியல்படுத்த முடியும்.

தமிழர்களின் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் பிரதிநிதிகளும் பங்குகொண்டு ஒரு அரசியல் யாப்பு சீர்திருத்தம் ஏற்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள ஒரு காலகட்டமாகும்.

1986ஆம் ஆண்டு இருநாடு ஒரு மொழி,இருமொழி ஒரு நாடு என்று துனிந்து கூறிய கொல்வின் ஆர்.டி.சில்வா உட்பட அன்றைய ஆட்சியாளர்கள் செய்த அநீயாயம் பெரும் ஒரு ஆயுதப்போராட்டமாக வெடித்து மிகப்பெரும் இழப்புகளை சந்தித்து.

இறுதியில் 2009ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்து இன்று இந்த நாட்டில் சர்வதேசம் அரசியல் தீர்வில் ஒரு பங்காளியாக வருவதற்கான பொறுப்புகளை நாங்கள் ஒவ்வொருவரும் கூறவேண்டிய கடமையில் உள்ளோம்.

இந்த காலகட்டம் மிகவும் முக்கியத்துவமானதாகும். சிறுபான்மை சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் என்ற அடிப்படையில் அனைத்து தலைமைகளும் ஒன்றிணைந்த நிலைப்பாடு என்பது மிகவும் முக்கியமானது ஆகும்.

இது தொடர்பில் தீவிரமாக சிந்திக்கவேண்டிய காலகட்டத்தில் உள்ளோம் என்றார்.






சிறுபான்மை தலைமைத்துவங்கள் ஒன்றிணைந்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்: ஹக்கீம்... Reviewed by Author on April 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.