குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய் - கடனை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை
வவுனியா - ஓமந்தை புதிய வேலன் சின்னக்குளம் பகுதியில் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்ட தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் இன்று(03) காலை மீட்கப்பட்டுள்ளன.
நுண்நிதி நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட சிறுதொகை கடனுக்குரிய தவணைக் கட்டுப் பணத்தை செலுத்த முடியாமலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மீள்குடியேற்ற கிராமமான வவுனியா - ஓமந்தை, புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் சிலவற்றுக்கு குழுமுறையில் நுண்நிதி நிறுவனங்களால் கடன் வழங்கப்பட்டிருந்தது.
குறித்த கடனை உரிய தவணைக்கு உடனடியாக செலுத்த முடியாத நிலையில் கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் வீட்டை விட்டு தனது குழந்தையுடன் நேற்றைய தினம் சென்றிருந்த இளம் தாயும், குழந்தையும் இன்றைய தினம் காலை அப்பகுதியில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த தாயையும், குழந்தையையும் தேடிய கணவர் மற்றும் உறவினர்கள் சடலம் கிணற்றில் இருப்பதைக் கண்டு ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இவ்வாறு சடலாமக மீட்கப்பட்டவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த நாகநாதன் சுகந்தினி (வயத 23), நாகநாதன் ஜிந்துஜன் வயது (2) என்பவர்கள் ஆவார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோர் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்ததுடன் அப்பகுதி மக்களிடமும் இது தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர்.
இதேவேளை, உயிரிழந்த பெண்ணின் கணவன் கடந்த சில நாட்களாக நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய் - கடனை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை
Reviewed by NEWMANNAR
on
November 04, 2016
Rating:

No comments:
Post a Comment