காணாமல் போனவர்கள் தொடர்பில் கால அவகாசம் கோரும் அரசு....
காணாமல் போனவர்கள் தொடர்பில் பதிலளிப்பதற்கு அரசாங்கம் கால அவகாசம் கோரியுள்ளது. அதன் அடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், காணாமல் போனவர்களின் உறவுகள் போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த போராட்டமானது பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவின் வாக்குறுதிக்கு அமைவாக கைவிடப்பட்டது.
இவ்வாறு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படியில் நேற்றைய தினம் காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் அரசாங்கப் பிரதிநிதிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் குறித்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்றவில்லை.
அத்துடன் இந்த சந்திப்பில், ருவான் விஜேவர்தன, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க மற்றும் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் ஆகியோர் மட்டுமே கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த சந்திப்பின் போது காணாமல் போனோர் விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு போலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு திங்கட்கிழமை பதில் வழங்க முடியும் எனவும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பில் கால அவகாசம் கோரும் அரசு....
Reviewed by Author
on
February 10, 2017
Rating:

No comments:
Post a Comment