ஒற்றுமையை நிலைநாட்டவே புலிகள் த.தே.கூட்டமைப்பை உருவாக்கினார்கள்!
தமிழ் மக்களின் ஒற்றுமையை நிலைநாட்டும் செயற்பாடாகவே அன்று தமிழீழ விடுதலை புலிகள் த.தே.கூட்டமைப்பு என்ற மாபெரும் கட்சியை உருவாக்கியிருந்தார்கள் என கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனையில் முதியோர் சங்கத்திற்கு தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து கதிரைகள் வழங்கும் நிகழ்வானது முதியோர் சங்கத்தின் செயலாளர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
மாற்று தேசியக் கட்சிகளில் தமிழர் பிரதேசங்களில் களமிறங்கும் தங்களை தமிழர்கள் என்று கூறும் தமிழ் வேட்பாளர்கள் தேர்தல் காலங்களில் மாத்திரம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அதிகளவான பணத்தினை செலவழித்து மாற்று இனத்திற்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொடுத்து அவர்களை நாடாளுமன்றம் அனுப்புகின்றார்கள்.
அதன்பின்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வரலாற்று தவறை செய்து விட்டது என்று கூறி ஓடி மறைந்து விடுன்றார்கள்.
இவர்களின் இவ்வாறான போலி வார்த்தைகளை நம்பி தமிழ் மக்கள் ஏமாந்தால் மாற்று இனத்தை அரியாசனம் ஏற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் பட்டிருப்பு தொகுதியானது தனித் தமிழ் தொகுதியாகும். ஆனால் வேற்று கட்சிகளின் சின்னத்துடன் வாக்குகளை பெற்று தாங்கள் அமைச்சர்களாக வருவோம்.
கங்கணம் கட்டிக்கொண்டு தேர்தல் காலங்களில் களம் இறங்கும் தமிழர்கள் எடுக்கும் வாக்குகளினால் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய் வேற்று இனத்தவர்கள் அந்த பிரதிநிதித்துவத்தினை பெற்றுக்கொள்கின்றார்கள். இதனால் இந்தத் தொகுதியில் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகின்றது.
இவ்வாறான வரலாற்று துரோகங்களை பட்டிருப்பு தொகுதியில் உள்ள தமிழர்கள் இனிமேலும் விடாமல் தங்களுக்கான பிரதிநிதித்துவத்தினை தாங்களே பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டு எமது உறுப்பினர்களின் தொகையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
நல்லாட்சி என்று கூறும் இந்த அரசாங்கத்தில் பட்டதாரிகள் தாங்கள் கற்ற கல்விக்கான தொழிலினை பெற்றுக் கொள்வதற்காக வீதிகளில் உறங்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை உருவாகியிருப்பதனையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
தாங்கள் கல்வியினை கற்று தமது குடும்பத்தினை கவனிக்க வேண்டும் என்று பட்டங்களை பெற்ற பட்டதாரிகள் இன்று வேலையில்லா பட்டதாரிகள் என்ற நாமத்துடன் வடகிழக்கு பிரதேசங்களில் வீதி ஓரத்தில் இரவு பகலாக உறங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்பது மன வேதனை தரும் விடயமாகும்.
அதே போன்று தான் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த அவர்களது சொந்த காணிகளை இலங்கை இராணுவம் இன்றும் தங்களது ஆக்கிரமிப்புக்குள் வைத்திருப்பதனால் காணிக்கு உரிமையானவர்கள் தங்களது காணியை பெற்றுத் தரக் கூறி வீதிகளில் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.
advertisement
தமிழ்மக்களுடைய காணிகளை அவர்களிடம் கையளித்து அவர்களது எதிர்கால வாழ்வை சிறந்த முறையில் ஆக்க வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் இன்றைய அரசாங்கத்திற்கே உள்ளது.
இந்த நல்லாட்சி என்று கூறும் அரசாங்கத்தினை கொண்டு வருவதற்கு உழைத்ததில் பாரிய பொறுப்பு எமது மக்களை சாரும் என்பதனை யாரும் மறந்து விட முடியாது.
கிழக்கு மாகாணத்தினை பொறுத்த வரை கிழக்கு மாகாண ஆளுநராக இருந்தவர் ஜனாதிபதியின் ஆலோசகராக சென்றதன் பின்னர் தற்போது பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த ஒருவர் மீண்டும் ஆளுநராக பதவியேற்று இருக்கின்றார் .
அவர் இங்குள்ள மூன்று இனத்தவர்களையும் சமமாக மதித்து தமது கடமைகளை சரிவரச் செய்ய வேண்டும் அவ்வாறு செய்யும் பட்சத்திலே தான் எமது மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படும்.
இனிவரும் காலங்களிலாவது தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். தமிழ் மக்களின் ஒற்றுமையை நிலைநாட்டும் செயற்பாடாகவே அன்று தமிழீழ விடுதலை புலிகள் த.தே.கூட்டமைப்பு என்ற மாபெரும் கட்சியை உருவாக்கியிருந்தார்கள்.
அவ்வாறு உருவாக்கிய பின்னர் நடைபெற்ற தேர்தலில் அதிகளவான தமிழ் பிரதிநிதிகள் த.தே.கூட்டமைப்பில் தெரிவு செய்யப்பட்டார்கள் அன்று இருந்த ஒற்றுமையை இன்று காண முடியாமல் உள்ளது.
த.தே.கூட்டமைப்பானது தமிழ் தேசியத்துடனும், தமிழ் மக்களுடனும் ஒன்றித்து நிற்கும் ஒரு கட்சியாகும் அவ்வாறான கட்சியினை பலப்படுத்த வேண்டியது தமிழ் மக்களாகிய எங்கள் ஒவ்வொருவரிடத்திலும் இருக்க வேண்டும்.
அவ்வாறு இருக்கும் பட்சத்திலே தான் எமது நீண்டநாள் இலக்கினை எம்மால் அடையக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
இந்த நாட்டிலே பல ஆண்டு காலமாக புரையோடிப் போயிருந்த தமிழ் மக்களுடைய போராட்டமானது எவ்வாறான இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தது என்றால் இணைந்த வடகிழக்கில் தமிழ் மக்கள் சகல உரிமைகளையும் பெற்று சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும்.
தங்களை தாங்களே ஆளவேண்டும் என்பதற்காகவுமே இதுதான் போராட்டத்தின் முழு நோக்கமுமாகும்.
ஆனால் தற்போது ஊடகங்களில் வடகிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என சில அரசியல் வாதிகள் கூறிவரும் கருத்தானது தமிழ் மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.
நல்லாட்சியில் ஒருசில நல்ல விடயங்கள் ஏற்பட்டிருந்தாலும் குறிப்பாக சம்பூர். வடபகுதியில் சில காணி விடுவிப்புக்கள் நடைபெற்று இருக்கின்றது.
ஆனால் முற்றுமுழுதான செயற்பாடுகள் இன்னும் நடைபெறவில்லை பொல்லாத ஆட்சியில் நடைபெற்ற சில செயற்பாடுகள் இன்றும் நடந்து கொண்டு தான் வருகின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தினால் வரையப்பட்டிருக்கும் அரசியல் யாப்பானது ஆக்கபூர்வமான யாப்பாக இல்லை என்பதுடன் அந்த யாப்பில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்தவர்களாகவும் காணப்படுகின்றார்கள்
அவ்வாறான அரசியல் சீர்திருத்த யாப்பைக்கூட நடைமுறைப்படுத்திவிடக் கூடாது என்பதில் பௌத்த மகாநாயக்க தேரர்கள் கடும் சிரத்தையுடன் இருப்பதனை அவர்களது அண்மைக்கால செயற்பாடுகள் கோடிட்டு காட்டுகின்றது என கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.
ஒற்றுமையை நிலைநாட்டவே புலிகள் த.தே.கூட்டமைப்பை உருவாக்கினார்கள்!
Reviewed by Author
on
July 08, 2017
Rating:

No comments:
Post a Comment