வடக்கில் மாவீரர் நாள் இப்படி நடத்தப்பட்டதன் பின்னணி என்ன? புதிதாக கண்டுபிடித்த தெற்கு அரசியல்வாதி -
இன்றைய ஆட்சியாளர்கள் உலக தமிழர் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதியின் விளைவாகவே வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூர்வதை இன்று தடுக்க முடியாதிருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.கொழும்பு சம்துத்த ஜயந்தி மண்டபத்தில் இன்றைய தினம் பிரித்தானிய ஆட்சியுடன் போராடி வீர மரணமடைந்த வீர கெப்பட்டிபொலவின் 199வது நினைவு தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய விமல்,தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாபெரும் உருவப்படம் யாழ்ப்பாணத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.அதேபோன்று, யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் சில இனவாத தமிழ் மாணவர்களால் சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கு விடுதலைப் புலிகளின் தலைவருக்காக வெட்டப்பட்ட கேக் ஊட்டி விடப்பட்டுள்ளது.இதனால் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக வவுனியா வளாகத்தில் இன்று நடைபெறவிருந்த பரீட்சை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
இவை எதனைக் காட்டி நிற்கின்றன. இந்த நாடு எங்குநோக்கி பயணிக்கின்றது. தமிழ் மக்களின் மனதில் துக்கம் ஏற்படலாம் எனக்கூறி மே 18ஆம் திகதி யுத்த வெற்றியை கொண்டாடுவதை தவிர்த்த இந்த அரசாங்கம், வடக்கில் புலிகளின் தலைவரை கொண்டாட இடமளித்ததினால் இனவாதத்தை எதிர்க்கும் சில தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் மனங்களை ஏன் அறிந்து கொள்ளவில்லை? இதுவா நல்லிணக்கம்? இனவாதிகளுக்கு தீர்மானம் எடுக்கின்ற சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் தலைவரது உருவப்படம் வடக்கில் ஏற்றும் போது, தெற்கில் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்வதற்கான உத்தரவை சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிடுகிறது.
இன்று இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு விளக்கமறியலும், விடுதலைப் புலிகளின் விமானப் படையின் இரண்டாவது பிரதானிக்கு 2016ஆம் ஆண்டில் விடுதலை வழங்கப்படுகிறது.
ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக சுமந்திரன், கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் தமிழ்மாறன், மங்கள சமரவீர ஆகியோர் உலக தமிழர் பேரவையிடம் மண்டியிட்டதாக தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த சந்திப்பின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட 10 உடன்படிக்கைகள் குறித்தும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. அதனால் எங்கு ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டாலும், எங்கு கேக் வெட்டப்படாலும், எங்கு புலிகளின் கொடி ஏற்றப்பட்டாலும் பார்த்துக் கொண்டிருக்கத் தான் முடியும்.
ஆவா குழுவின் வாள்களுக்கு வடக்கில் தமிழ் மக்களின் உயிர்கள் பலியாக வேண்டும் என்பதும் இந்த உடன்படிக்கையில் உள்ளதாக குறிப்பிட்ட விமல், முன்னாள் ஜனாதிபதி ஜயவர்தனவின் செயற்பாடு என்று ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தை கொளுத்தியும், யாழ் அபிவிருத்தி வாக்குகளைக் கொள்ளையிட்டு, 83இல் கறுப்பு ஜூலையை ஏற்படுத்தி விடுதலைப் புலிகளின் தலைவருக்கு மறைமுக சந்தர்ப்பம் முன்னாள் ஜனாதிபதி ஜயவர்தன வழங்கி விட்டார். அதைப்போல தற்கால தேசத் துரோக ஆட்சியாளர்களும் அதே இனவாத, பாசிசவாத மற்றும் ஸ்ரீலங்கா தேசியக் கொடியை ஏற்ற மறுக்கும் அரசியல்வாதிகள் எழும்புவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மகுமார உதயசாந்த, நிரோஷன் பிரேமரத்ன, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர உட்பட பலரும் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வில் எதிர்காலம் நாங்கள் என்ற தலைப்பிலான இளைஞர் படையணி ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வடக்கில் மாவீரர் நாள் இப்படி நடத்தப்பட்டதன் பின்னணி என்ன? புதிதாக கண்டுபிடித்த தெற்கு அரசியல்வாதி -
Reviewed by Author
on
November 28, 2017
Rating:

No comments:
Post a Comment