மன்னாரில் அரசாங்க அதிபராக தமிழரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் -
மன்னார் மாவட்டத்தில் 99 வீதம் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட மாவட்டமாகும். கடந்த காலத்தில் இரண்டு சிங்கள அரசாங்க அதிபர்கள் ஏழு ஆண்டுகளாக பதவி வகித்துள்ளனர். எனவே தற்போது கடமையில் இருந்த அரசாங்க அதிபர் அமைச்சின் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆகவே அடுத்து தமிழர் ஒருவரை அரசாங்க அதிபராக நியமிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில்,
மன்னார் மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட உள்ளவர் எமது மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
அவரே தகுதியானவராக உள்ளார். அவர்களை நியமிப்பது பொருத்தமானதாகும். ஆனால் நீங்கள் மீண்டும் சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவரையே அரசாங்க அதிபராக நியமிக்கவுள்ளதாக அறிகின்றோம்.
இது எமது மன்னார் மக்களுக்குச் செய்யும் பெரும் துரோகம் ஆகும். கடந்த காலத்தில் இருந்த சிங்கள அரசாங்க அதிபர் சாமானிய மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை புரிந்து கொள்ளாமல் சர்வாதிகாரியாகவே நிர்வாகம் நடத்தியவர்.
அதனால் பல விடயங்கள் தேக்கமடைந்ததுடன் நிர்வாகச் சீர்கேடுகளும் ஒழுங்கின்மைகளும் தாண்டவமாடியது.
எந்த சனநாயக கருத்துக்களும் மதிப்பளிக்கவில்லை. அவ்வாறான ஒருவர் அரசாங்க அதிபராக மன்னாருக்கு தேவையில்லை. மக்களோடு மக்களாக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய நிர்வாகத் திறனுள்ள ஒருவரே எமக்கு வேண்டும்.
உங்கள் ஆட்சியை பேரளவில் நல்லாட்சி என கூறுவதில் அர்த்தமில்லை. நல்லிணக்கம் என்பது அந்த மக்களின் உணர்வுகளின் விருப்புக்கு விசுவாசமாக இருப்பதே நல்லிணக்கம்.
அடக்கி ஆள்வதற்கு பெயர் நல்லிணக்கம் இல்லை. சிங்கள மயமாக்கல் சிந்தனையை தயவு செய்து நடை முறைப்படுத்தாதீர்கள்.
ஆகவே மன்னார் மாவட்ட மக்களின் விருப்பிற்கு மாறாக செயற்பட மாட்டீர்கள் என நம்புகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தின் பிரதிகள் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் றிஸாட் பதியுதீன் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் அரசாங்க அதிபராக தமிழரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் -
Reviewed by Author
on
March 20, 2018
Rating:
No comments:
Post a Comment