முதலமைச்சர் விக்கி இரணைதீவு விஜயம் -
படையினர் வசமுள்ள தமது பூர்வீக நிலத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சி இரணைதீவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்திப்பதற்காக, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சென்றுள்ளார்.
மக்களுக்குத் தேவையான உலருணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுடன் அவர் இன்று காலை இரணைதீவு சென்றுள்ளார். முதலமைச்சருடன், வடக்கு மாகாண கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான பொ.ஐங்கரநேசன், கஜதீபன் உள்ளிட்ட பலர் அங்கு சென்றுள்ளர்.
கடற்படையின் கட்டுப்பாட்டில் காணப்படும் தமது பூர்வீக நிலத்தை விடுவிக்குமாறு இம்மக்கள் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி ஆரம்பித்த போராட்டம் ஒருவருடத்தை எட்டியபோதும் எவ்வித தீர்வும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி இரணைதீவுக்குள் நுழைந்த இம்மக்கள், அங்குள்ள இரணைமாதா ஆலயத்தில் தங்கியிருந்து சாத்வீகமான முறையில் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மக்களின் காணிகள் பற்றைக் காடுகளாகி, கட்டடங்கள் இடிக்கப்பட்டு, மக்கள் வாழ்க்கைக்கு ஒவ்வாத வகையில் இப்பிரதேசம் காணப்படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
எனினும், தமது சொந்த நிலத்தை மீட்பதற்காக இம்மக்கள் இப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருவதோடு, அவர்களுக்கு தேவையான பொருட்களை மக்கள் பிரதிநிதிகள் கடந்த சில நாட்களாக வழங்கி வருகின்றனர்.
முதலமைச்சர் விக்கி இரணைதீவு விஜயம் -
Reviewed by Author
on
May 14, 2018
Rating:

No comments:
Post a Comment