600 ஆண்டுகால பழமையான நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருப்பது கண்டுபிடிப்பு..!
36 ஆண்டுகளுக்கு முன்பு களவாடப்பட்ட தொன்மைவாய்ந்த நடராஜர் சிலை ஆஸ்திரேலிய நாட்டு அருங்காட்சியகத்தில் இருப்பதை ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் குலசேகரமுடையார், அறம்வளர்த்த நாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட இக்கோயிலில் தொன்மையான ஐம்பொன் சிலைகள் பல உள்ளன.
இந்த நிலையில் கடந்த 1982-ம் ஆண்டில் நடராஜர் சன்னதியின் இரும்பு கதவுகள் உடைக்கப்பட்டு 600 ஆண்டு தொன்மையான ஐம்பொன்னாலான நடாரஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, மாணிக்கவாசகர் சிலை, ஸ்ரீபலி நாயகர் சிலை என 4 சிலைகளும் களவாடப்பட்டன.
இது குறித்து கல்லிடைக்குறித்தி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் 1984-ம் ஆண்டு கண்டுப்பிடிக்க முடியாத வழக்கு என்று திருநெல்வேலி மாவட்ட காவல் துறையால் முடித்து வைக்கப்பட்டது.
36 வருடங்களாக துப்பு துலங்காமல் கிடந்த இந்த வழக்கில் ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான உயர்நீதிமன்ற புலன்விசாரணை குழு துப்பு துலக்கியுள்ளது. களவாடப்பட்ட 2 1/2 அடி உயரமுள்ள நடராஜர் சிலை தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை 2001-ம் ஆண்டு 30 கோடி ரூபாய்க்கு அந்த அருங்காட்சியகத்திற்கு விற்றுள்ளனர். இந்த சிலையையும் சேர்த்து இதுவரை 8 சிலைகள் ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டுவரப்படவுள்ளன. அனைத்து சிலைகளையும் மீண்டும் இந்தியா கொண்டு வந்து அந்தந்த கோயில்களில் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஈடுப்பட்டுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க களவாடப்பட்ட 2 அடி உயமுள்ள சிவகாமி அம்மன் சிலை மட்டும் 1985-ல் கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும், அச்சிலையை பாதுகாப்பு நலன் கருதி அருகிலுள்ள சுப்ரமணியர் திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறநிலையத்துறை ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் தற்போதுள்ள சிலை களவாடப்பட்ட சிவகாமி சிலை இல்லை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதனால் இக்கோயிலில் தற்போது உள்ள மேலும் 15 ஐம்பொன் சிலைகளும் மாற்றப்பட்டு அவற்றிற்கு பதிலாக போலி சிலை வைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சிலைகளை ஆஸ்திரேலியாவிற்கு கடத்திய கும்பல் யாரென்பதையும் கண்டுப்பிடித்துள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், கோயிலில் உள்ள சிலைகள் குறித்தும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
600 ஆண்டுகால பழமையான நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருப்பது கண்டுபிடிப்பு..!
Reviewed by Author
on
September 10, 2018
Rating:

No comments:
Post a Comment