மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு ஆளுனர் சபையினர் வடக்கு மாகாண ஆளுனருடன் சந்திப்பு-
மன்னார் மாவட்டத்துக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை (10.02.2019) வடக்கு
மாகாண ஆளுனர் விஐயம் ஒன்றை மேற்கொண்டபொழுது மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு ஆளுனர் சபையினர் வடக்கு மாகாண ஆளுனர் சுரேன் ராகவனை மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சந்தித்து தற்பொழுது மன்னார் மாவட்டத்தில் நிலவி வரும் ஒரு சில குறைபாடுகளை சீரமைக்கும் நோக்குடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தினர்.
தனியார் கல்வி நிறுவனங்கள்
மன்னார் மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களினால் நடாத்தப்படும்
பிரத்தியேக கட்டண வகுப்புக்கள் எமது கலாச்சார மற்றும் சமய
அணுஸ்டானங்களுக்கு இடமளிக்கும் வண்ணம் வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் வகுப்புக்கள் நடைபெறுவதை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கலந்துரையாடப்பட்டது.
மன்னாரில் மும்மத மக்கள் செறிந்து வாழ்கின்றனர். இப் பகுதியில் வெள்ளி,
மற்றும் ஞாயிறு தினங்களில் தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டண வகுப்புக்கள் நடாத்துவதால் வெள்ளிக் கிழமைகளில் இந்து மற்றும் முஸ்லீம் மாணவர்கள் தங்கள் முக்கிய தினமாகிய இந்நாளில் தங்கள் சமய அணுஸ்டானத்தை கடைபிடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவ்வாறு ஞாயிறு தினம் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களுக்கு ஒரு முக்கிய நாளாக இருக்கின்றது. இதனால் கத்தோலிக்க மாணவர்கள் தங்கள் மத அணுஸ்டானத்தை கடைபிடிக்காத நிலையில் இருக்கின்றனர்.
மன்னாரில் ஒரு கல்வி நிறுவனத்தில் இடம்பெற்ற துர்பாக்கிய சம்பவம்
தொடர்பாக மன்னார் நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் வெள்ளி, ஞாயிறு ஆகிய இரு தினங்களும் பிரத்தியேக கட்டண வகுப்புக்கள் நடாத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதையும் மீறி இவை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அத்துடன் பாடசாலை நாட்களில் அதிகாலை 5 மணி தொடக்கம் பாடசாலைகளிலும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் நடாத்தப்படும் பிரத்தியேக கட்டண வகுப்புக்கள் நிறுத்தப்பட்டு மாணவர்கள் மேல் பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் நிறுத்தப்பட ஆவண செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததுடன்
தனியார் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டதா, அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள்
விபரங்கள் மாணவர்கள் கற்பதற்கு ஏற்ற இடமா என்பதின் விபரங்கள் திரட்டப்பட வேண்டும் எனவும் பெற்றோர்களுடனும் இது விடயமாக கலந்துரையாடப்பட வேண்டிய அவசியமும் கலந்துரையாடப்பட்டது.
அரச காணி பங்கீடு
மன்னாரை பொறுத்தமட்டில் அரச காணி பங்கீட்டு அளிப்பு முறைகள் மக்கள்
மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதால் இவை முறையாக
பரீசீளிக்கப்பட்டு தேவைப்படுவோருக்கு பகிர்தளிக்கப்பட வேண்டும் என்ற
கோரிக்கையை முன்வைத்து உரையாடப்படுகையில்
இதுவிடயமாக இங்குள்ள சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளிடம் வினவுகின்றபொழுது இவர்களால் சரியான விபரங்களை வெளிப்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றனர். இங்குள்ள ஐந்து பிரதேச செயலக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியாதாம் அரச காணிகள் எவ்வளவு இருக்கின்றது என்று. ஆனால் இவர்கள் சட்டத்துக்கு புறம்பாக காணிகள் வழங்கப்பட்டு வருவது கண்கூடாக இருக்கின்றது.
ஆகவே 1983ம் ஆண்டுக்குப் பின் வழங்கப்பட்ட அரச காணிகளின் விபரங்களை
சேகரிக்க வேண்டிய அவசியம் சம்பந்தமாகவும் முன்வைக்கப்பட்டது.
வீட்டுத்திட்டம்
அரச வீட்டுத்திட்டமானது போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்
இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கும் விதவைகள் குறைவான
வருமானமுள்ளவர்களுக்கும் புனர்வாழ்வு முகாம்களில் இருந்து
விடுவிக்கப்பட்டவர்களுக்கும் முறையாக பகிர்ந்தளிக்கப்பட ஆவண செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மேய்ச்சல் நிலம்
இப்பகுதியில் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் இல்லாது கால்நடை
வளர்ப்போர் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே கால்நடைகளுக்கு ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் நிலங்களில் சட்டவிரோதமாக விவசாயம் செய்வோரை அதிகாரிகள் கண்டுகொள்ளாது இருப்பது வேதனைக்குரியது. இதுவிடயமாக தக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டப்பட்டது.
அபிவிருத்தி திட்டங்கள்
அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களான வீதி அமைத்தல், குடிநீர் வழங்கல், வீதி விளக்குகள் பொருத்துதல், வாசிகசாலை, பொதுநோக்கு
மண்டபங்கள் அமைத்தல், சிறுவர் பூங்கா அமைத்தல் போன்ற
அபிவிருத்தித்திட்டங்கள் எல்லா கிராமங்களுக்கும் சமமாக சென்றடைவதற்கு ஆவண செய்யப்பட வேண்டும்.
ஆசிரியர் பற்றாக்குறை
பாடசாலைகளில் பொருத்தமான பாடங்களுக்கான ஆசிரியர் ஆளணிகளை வழங்குவதற்கும் பொருத்தமான உட்கட்டமைப்பு வசதிகள் பௌதீக வள வசதிகளை தேவைக்கேற்ப வழங்குவதற்கும் ஆவண செய்யப்படல் வேண்டும் என கோரப்பட்டது.
கால்நடை இறப்பு அண்மை காலமாக மன்னார் மாவட்டத்தில் கால்நடைகள் கால்வாய் என்ற நோய்க்கு உள்ளாகி நாளுக்கு நாள் இறந்து வருகின்றன. கால்நடைகள் திடீர் நோய்களினால் இறப்பதைத் தடுப்பதற்குரிய விரைவான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகளின் மூலம் மேற்கொள்ளப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அத்துடன் இரவு நேரங்களில் வீதிகளில் கால்நடைகள் நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் பல வீதி விபத்துக்களும் நடைபெறுகிறது. எனவே உரிய அதிகாரிகள் மூலம் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு ஆளுனர் சபையினர் வடக்கு மாகாண ஆளுனரிடம் இக் கோரிக்கைகளை முன்வைத்து விரிவாக உரையாடினர்.
மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு ஆளுனர் சபையினர் வடக்கு மாகாண ஆளுனருடன் சந்திப்பு-
Reviewed by Author
on
February 13, 2019
Rating:
Reviewed by Author
on
February 13, 2019
Rating:


No comments:
Post a Comment