தமிழ் நாடு நோக்கி தஞ்சம் வந்த தமிழர்களை சிறை முகாமில் வைத்திருப்பது மோசமான செயல் -
இனப்படுகொலையாளனிடமிருந்து தப்பி தமிழ் நாடு நோக்கி தஞ்சம் வந்த தமிழர்களை தமிழ் நாடு அரசும் சிறை முகாமில் வைத்திருப்பது மிக மோசமான மனித தன்மையற்ற செயலாகும் என மே பதினேழு இயக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் மேலும்,
தமிழீழ அகதிகள் மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்களை ஒடுக்குவதற்கு சிறப்பு முகாம் என்ற பெயரில் சித்ரவதை முகாமினை, திருச்சி மத்திய சிறைக்குள் தமிழக அரசு நடத்தி வருகிறது.
பாஸ்கரன், ரமேஷ், செல்வம் ஆகிய மூன்று தமிழர்கள், தங்களை சிறப்பு முகாமிலிருந்து விடுவியுங்கள் அல்லது கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று கோரிக்கை வைத்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆனால் அவர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருகிறது. இனப்படுகொலையாளனிடமிருந்து தப்பி தமிழ் நாடு நோக்கி தஞ்சம் வந்த தமிழர்களை தமிழ் நாடு அரசும் சிறை முகாமில் வைத்திருப்பது மிக மோசமான மனித தன்மையற்ற செயலாகும்.
ஆரம்பத்தில் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில் இயங்கி வந்த சிறப்பு முகாம்களை திருச்சி சிறைக்குள் மாற்றியது தமிழக அரசு.
சிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகத்தில் பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தின் அனைத்து ஈழ ஆதரவு கட்சிகளும், அமைப்புகளும் இப்போராட்டத்தினை நடத்தியிருக்கின்றன.
முகாம்களுக்குள்ளும் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக தமிழர்கள் பல போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழீழ தமிழர்களை குற்றப் பரம்பரையாக நடத்த இந்த முகாமினை தொடர்ச்சியாக தமிழக அரசு நடத்தி வருகிறுது.
இந்த கொடுமையினை உடனடியாக தமிழக அரசு நிறுத்த வேண்டும். சிறப்பு முகாம் எனும் சிறைவதை முகாமினை உடனடியாக இழுத்து மூட வேண்டும், சிறப்பு முகாமிலிருந்து அனைத்து தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்கரன், ரமேஷ், செல்வம் ஆகியோர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு சிறைவதை முகாமில் இருந்து தங்களை விடுவிக்க கோரி அல்லது கருணை கொலை செய்ய கோரி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவர்களின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர்களின் உண்ணாவிரம் தொடர்ந்தே வருகிறது. ஆனால் இதுவரை எந்த அதிகாரிகளோ மாவட்ட ஆட்சியரோ போராட்டகாரர்களை கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
தமிழ் நாடு நோக்கி தஞ்சம் வந்த தமிழர்களை சிறை முகாமில் வைத்திருப்பது மோசமான செயல் -
Reviewed by Author
on
June 23, 2019
Rating:

No comments:
Post a Comment