முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் காடழிப்பு -
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக காடழிப்பு இடம்பெற்று வருவதாகவும், இது குறித்து சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை என்றும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள, மாங்குளம் மற்றும் பனிக்கங்குளம் ஆகிய பிரதேசத்திற்கு இடைப்பட்ட பகுதியிலேயே இவ்வாறு காடழிப்பு இடம்பெற்று வருகின்றது.
இந்த விடயம் தொடர்பாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டுசென்ற போதிலும் அதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் அரச திணைக்களம் ஒன்றை அமைப்பதற்காகவே இவ்வாறு காட்டின் பெரும் பகுதி அழிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தற்போது காணப்படும் அதிக வெப்பம் மற்றும் மழை வீழ்ச்சி இன்மையால் வறட்சியான நிலை காணப்படும் நிலையில், இவ்வாறு கட்டுப்பாடின்றி காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றமையானது எதிர்காலத்திற்கே ஆபத்தான ஒன்றாகும் என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விடயம் குறித்து கவனிக்காத ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காடழிப்பை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புக்கமைவாக இடம்பெற்றுவரும் நிலையிலேயே, முல்லைத் தீவில் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, வரட்சி மற்றும் காடழிப்பு குறித்து அரசாங்கம் அக்கறை செலுத்தாமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம் இன்று வினவியபோது,
“முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய காடழிப்பு ஒன்று இடம்பெற்று வருகின்றது. குறித்த காடழிப்பு குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
அத்துடன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம். இந்த காடழிப்பிற்கு அரச அதிகாரிகள் மாத்திரமல்லாது அரசியல்வாதிகளும் உடந்தையாக இருக்கின்றனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் காடழிப்பு -
Reviewed by Author
on
June 27, 2019
Rating:

No comments:
Post a Comment