ஒரே பிரசவத்தில் பிறந்த 3பச்சிளம் குழந்தைகளுக்கு கொரோனா......
அந்த 3 குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை உலகில் எங்கும் இப்படி நடந்ததாக தகவல் இல்லை என்று மெக்சிகோ சுகாதார அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள்.
பொதுவாகவே புதிதாக பிறந்த குழந்தைக்கு அதே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுவது இல்லை. இது கேள்விப்படாத ஒன்றாகவே இருக்கிறது. ஒருவேளை கொரோனா தொற்று உடையவர்கள் அந்த குழந்தையை பார்க்க வந்து, தூக்கி வைத்து கொஞ்சி இருந்தால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.
அங்குள்ள சான் லூயிஸ் பொட்டோசி மாகாணத்தில் உள்ள ஆஸ்பத்திரியில்தான் 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை அந்த இளம்தாய் பெற்றெடுத்திருக்கிறார்.
ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உடல்நிலை தேறி வருகின்றன. ஸ்திரமாக இருக்கின்றன. மற்றொரு ஆண் குழந்தைக்கு சுவாச பிரச்சனையால் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த குழந்தைகளுக்கு தாயின் கருப்பையில் இருந்தபோது, கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடி வழியாக கொரோனா வைரஸ் பரவி இருக்க முடியுமா என்று மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
இதுபற்றி மாகாண சுகாதார கமிஷனின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “ஒரே பிரசவத்தில் பல குழந்தைகள் பிறந்து அந்த குழந்தைகள் அனைவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. எனவே இது குறித்து விசாரித்து வருகிறோம்” என்கிறார்.
புதிதாக பிறந்த குழந்தைகளில் மிக குறைந்த எண்ணிக்கையில், பிறந்த பிறகு வைரஸ் பாதிக்கலாம் என அறியப்படுகிறது. ஆனால் இப்படி 3 குழந்தைகள் பிறந்து அவர்கள் அனைவருக்கும் கொரோனா என்பது நம்ப முடியாத அதிசயமாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் வியந்து போகிறார்கள்.

No comments:
Post a Comment