செஞ்சோலைப் படுகெலையின் 18 ம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவிகள் 53 பேர் உட்பட கொல்லப்பட்ட 61 பேரின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள இடைக்கட்டு சந்தி பகுதி மற்றும் விமான தாக்குதல் இடம்பெற்ற செஞ்சோலை வளாகம் அமைந்திருந்த பகுதியில் இன்று உணர்வுபூர்வமாக (14) நடைபெற்றது.
முன்னதாக செஞ்சோலை வளாகம் அமைந்திருந்த பகுதியில் இன்றுகாலை உயிரிழந்த மாணவி ஒருவரின் உறவினரால் சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது . அதனை தொடர்ந்து செஞ்சோலை வளாகத்துக்கு செல்லும் வீதியின் ஆரம்பத்தில் உள்ள நினைவேந்தல் வளைவில் நினைவேந்தல் நிகழ்வொன்று இடம்பெற்றது .இந்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் திருவுருவப்படத்துக்கு சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது .
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ,முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் து. ரவிகரன் மற்றும் உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். கடந்த 2006ஆம் ஆண்டு இதேநாள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர்கள் வளாகத்தில் முதலுதவி பயிற்சிக்காக தங்கிநின்ற மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 53 மாணவிகள் கொல்லப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது .

No comments:
Post a Comment