மதுரையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவை
மதுரையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமான சேவை அதிகரித்துள்ள பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு போர் காரணமாக சென்னை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையிலான விமான சேவை 1983ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டதுடன், 1990ஆம் ஆண்டு பலாலி விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளை அதி உயர் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டது.
எனினும், கடந்த 2019ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் இந்திய நிதியுதவியுடன் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றப்பட்டதுடன் விமான சேவைகளும் இடம்பெற்றன.
எனினும், கொவிட் தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் விமான நிலையம் மூடப்பட்டதுடன், 34 மாதங்களுக்கு பின்னர் 2022 டிசம்பரில் மீளவும் திறக்கப்பட்டது.
இந்நிலையிலேயே, கடந்த முதலாம் திகதி முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமான சேவையை தொடங்கியுள்ளது.
சென்னை - யாழ்ப்பாணம் இடையே விமான சேவை குறுகிய காலக்கட்டத்திலேயே வரவேற்பை பெற்றுள்ளதால், மதுரையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாரத்திற்கு ஏழு நாட்களும் விமான சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, மதுரை - கொழும்பு இடையே முதல் சர்வதேச விமான சேவை கடந்த 2012 செப்டம்பர் ஆரம்பிக்கப்பட்டதுடன், தற்போது மதுரையிலிருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment