மன்னாார் நீதிபதிக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கூறப்படும் முக்கிய சந்தேக நபரான ரங்காவை கைது செய்வதற்கான பணிகள் துரிதம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவை கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு அவதூறு ஏற்படும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீரங்காவை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு பிரதம நீதவான் திலின கமகேவிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கடந்த 21ஆம் திகதி அறிவித்திருந்தனர்.
எனினும், பிரதான சந்தேகநபரான ஸ்ரீரங்கா தற்போது வீட்டில் இல்லாத நிலையில் அவரை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
தமது சேவைபெறுநர்கள் இந்த வழக்கின் சாட்சியாளர்களாக உள்ளதாக இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சில சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாட்சியாளர்களை இவ்வாறு விளக்கமறியலில் வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் பொலிஸார் வழக்கு தொடர்பான விடயங்களை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத நிலை உருவாகும் என ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 சந்தேகநபர்களில் நால்வரை மாத்திரம் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.
ஏனைய சந்தேகநபர்கள் நால்வரையும் எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Reviewed by Author
on
October 23, 2024
Rating:


No comments:
Post a Comment