மன்னார் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளருக்கு எதிராக முறைப்பாடு – இன்பராசா குற்றச்சாட்டு..!
“மன்னார் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் வினோதன் அவர்களது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக 30 இற்கும் மேற்பட்டவர்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள். அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் நாயகம் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.
வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,”மன்னார் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் த.வினோதன் அவர்கள் பழிவாங்கல், அதிகார துஷ்பிரயோகம், பக்கச்சார்பு, முறைகேடு என்பன தொடர்பாக சில விடயங்களை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துகின்றோம்.
அவர் 2019 ஆம் ஆண்டு முதல் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இடையில் சில மாதம் கிளிநொச்சியில் பணியாற்றியவர். இதன்போது மன்னாரில் சிங்கள வைத்தியர் ஒருவர் பொறுப்பாக செயற்பட்டார். இடமாற்றம் செய்த பின்பும் பழிவாங்கும் செயற்பாடுகளை செய்தவர். மன்னார் வைத்தியசாலை தொடர்பாக முகநூலுலில் பல கருத்துக்களை போட்டு மீளவும் மன்னார் வந்தார். தனக்கு பிடிக்காத உத்தியோகத்தர்கள் மீது பழிவாங்கும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றார்.
13 வருடங்களாக மன்னாரில் பணியாற்றும் பிரியந்தன் என்பவருக்கு இடமாற்றம் வந்தும் அவருக்கு இடமாற்றம் கொடுக்காது அவரை வைத்து சில வேலைகளை செய்து வருகின்றார். இடமாற்றங்கள், இடமாற்ற மேன்முறையீடுகள், வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளரால் வழங்கப்படும் இடமாற்றங்களைக் கூட சில உத்தியோகத்தர்களுக்கு வழங்காது தடுத்து வருகின்றார். சில விடயங்களில் அவர் பக்கச்சார்பாக செயற்பட்டு வருகின்றார். பலருக்கு சம்பளங்களை நிறுத்தி வைத்து பழிவாங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன.
சில உத்தியோகத்தர்களை பழிவாங்கி வருகின்றார். நிர்வாக உத்தியோகத்தர் பதவியை தனக்கு பிடித்த ஒருவருக்கு கொடுத்து விட்டு செயற்பட்டு வருகின்றார். கிழக்கு மாகாணத்தில் இருந்து மன்னாரில் வந்து பணியாற்றும் குடும்பநல உத்தியோகத்தர் ஒருவருக்கு மாகாணத்தால் இடமாற்றம் வழங்க அனுமதி வந்தும் அந்தக் கடிதத்தைக் கூட காட்டாமல் வைத்திருக்கிறார். கடிதம் தனிப்பட்ட ரீதியில் குறித்த குடும்பநல உத்தியோகத்தருக்கு கிடைத்ததும் பணிப்பாளர் வினோதனிடம் கேட்ட போது, தரக்குறைவாக கதைத்துள்ளார். அந்த விடயம் கடிதம் மூலம் மாகாணத்திற்கு மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றார். இவை தொடர்பாக அனைவருக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளோம்.
மன்னார் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் வினோதன் அவர்களது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக 30 இற்கும் மேற்பட்டவர்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள். அவர்கள் கையொப்பம் வைத்தும் கடிதம் தந்துள்ளார்கள்.
இந்த விடயம் தொடர்பாக அனைத்துப் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் தீர்வு வரவில்லை. பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் 10 பேர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறுகிறார்கள். ஆனால் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். வடிவாக சாப்பிட்டு விட்டு பணிப்பாளர் வினோதன் அவர்களை மாற்றும் வரை ஆர்ப்பாட்டம் செய்யுங்கள் எனக் கூறியுள்ளேன். மாகாணப் பணிப்பாளர், ஆளுநர், சுகாதார அமைச்சு வரும் வரை அந்த ஆர்ப்பாட்டம் நடக்க வேண்டும் எனக் கூறியுள்ளேன்.
தென்பகுதியில் உள்ள பல அரசியல்வாதிகள், அதிகாரிகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள அரசாங்கம் வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள ஊழல் அரசியல்வாதிகள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

No comments:
Post a Comment