மன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு
தேசிய போசாக்கு மாதத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் போசாக்கான உணவுகளை உண்ணும் பழக்கத்தை வலுப்படுத்தும் முகமாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை இணைந்து ஏற்பாடு செய்த விசேட விழிப்புணர்வு நிகழ்வு மன்/சித்தி விநாயகர் இந்து கல்லூரியில் இன்று (20) இடம் பெற்றது
"பழங்களும் மரக்கறிகளும் எப்போதும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் எனும் தொனிப்பொருளில்" இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் மாணவ மாணவியர்கள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கையில் ஆண்டுதோறும் அதிகரிக்கும் தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதற்கான ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம் மற்றும் அன்றாட உணவுகளில் தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள் தொடர்பில் மாணவர்களுக்கு தெளிவூட்டும் விதமாக குறித்த விழிப்புணர்வு நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது.
அதே நேரம் சுகாதார உத்தியோகஸ்தர்களினால் தயாரிக்கப்பட்ட உடலுக்கு தீங்கு ஏற்படுத்தாத சிற்றுண்டி பரிமாற பட்டத்துடன் அன்றாட உணவு பழக்கங்களில் நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறை தொடர்பான மேடை நாடகமும் மாணவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன்,மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லம்பேர்ட்,மன்னார் பொது சுகாதார அதிகாரிகள்,பரிசோதகர்கள்,சுகாதார உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment