ஈரானுக்கு எதிரான போரில் இதுவரை 181 குழந்தைகள் பலி!
ஈரானின் பல இராணுவக் குழுக்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், இராணுவ பலத்தைப் பொறுத்தவரை அமெரிக்கா ஈரானை விட மிகவும் சக்திவாய்ந்த நிலையில் இருப்பதாக எச்சரித்துள்ளார்.
கடந்த வார இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய சரமாரித் தாக்குதல்களால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் பதற்றமடைந்துள்ளது. சுமார் 40 ஆண்டுகளாக ஈரானை வழிநடத்திய ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட 1,332 பேர் இந்த பாரிய தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க மத்திய கட்டளை அலுவலகத்தின் தகவல்படி, கடந்த 72 மணித்தியாலங்களில் 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தலைநகர் தஹ்ரானில் தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்களால் இரவு நேரங்களிலும் நகரம் முழுவதும் அடர்ந்த புகைமூட்டமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈரானின் முக்கிய இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாவதற்கு முன்னரும் பின்னருமான செயற்கைக்கோள் புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன.
மினாப் பகுதியிலுள்ள ஷாஜாரே தயேபே ஆரம்பப் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 168 மாணவிகள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் உயிர் பிழைத்த மாணவி ஒருவர், தனது தந்தை மற்றும் 11 வயது சகோதரனை இழந்த சோகத்தை ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார்:
"பாடசாலை முடிந்து என்னை அழைத்துச் செல்ல தந்தை எப்போதும் வெளியே காத்திருப்பார். அன்று ஒரு வெடிப்புச் சத்தம் கேட்டதும், அம்மாவைக் காப்பாற்ற தந்தை ஓடினார். அப்போது ஏற்பட்ட மற்றுமொரு வெடிப்பில் அவர் உயிரிழந்தார். நான் பயத்தில் வகுப்பறைக்குள் ஓடிச் சென்றபோது மயக்கமடைந்தேன். என் முதுகில் பெரிய கல் ஒன்று விழுந்திருந்தது. கண் விழித்துப் பார்த்தபோது என் சகோதரர், குடும்பத்தினர் என அனைவரும் என்னை விட்டுப் பிரிந்துவிட்டனர்."
மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக இதுவரை சுமார் 192 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெப் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது. இதில் 181 பேர் ஈரானியக் குழந்தைகள், 7 பேர் லெபனானைச் சேர்ந்தவர்கள், 3 பேர் இஸ்ரேலியர்கள் மற்றும் ஒரு குழந்தை குவைத் நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளை அதிகாரிகள் சுமார் 3,000 ஈரானிய இலக்குகள் மீது வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், 43 ஈரானியக் கப்பல்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் ஆகிய நகரங்களை இலக்கு வைத்துள்ளன. இதனால் இஸ்ரேலில் எச்சரிக்கை சைரன் ஒலிகள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றன.
இதேவேளை, ஈரான் இராணுவம் இன்னும் சரணடைவதற்கு வாய்ப்பு உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்தப் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து நியூயோர்க்கின் வொஷிங்டன் சதுக்கத்தில் திரண்ட போராட்டக்காரர்களுக்கு இடையே மோதல் வெடித்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானுக்கு எதிரான போரில் இதுவரை 181 குழந்தைகள் பலி!
Reviewed by Vijithan
on
March 07, 2026
Rating:
Reviewed by Vijithan
on
March 07, 2026
Rating:


No comments:
Post a Comment