இலங்கை வடக்கு மாகாணப் பள்ளிகளில் பைபிள் விநியோகம்: மன்னார் இந்து மஹா சபை கடும் எதிர்ப்பு
இலங்கை வடக்கு மாகாணப் பள்ளிகளில் பைபிள் விநியோகம்: மன்னார் இந்து மஹா சபை கடும் எதிர்ப்பு
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாக கிறிஸ்தவ மத நூலான பைபிளை வழங்க ஒரு கிறிஸ்தவ மிஷனரி அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு வடக்கு மாகாண கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த நடவடிக்கைக்கு மன்னார் இந்து மஹா சபை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணப் பள்ளி மாணவர்களுக்கு பைபிள் விநியோகிக்க முனையும் கிறிஸ்தவ அமைப்பையும், அதற்கு துணைபோகும் வட மாகாணக் கல்வித்துறையின் செயல்பாட்டையும் வன்மையாக கண்டிப்பதாக சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மன்னார் இந்து மஹா சபையின் தலைவர் செ.சி. இராமகிருஷ்ணன் கருத்து தெரிவிக்கையில்,
“அனைத்து மதங்களையும் மதிப்பது மிகவும் முக்கியமானது. ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தின் நூலை, குறிப்பாக பாடசாலைகள் மூலம் பிற மதத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு விநியோகிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது,” என தெரிவித்துள்ளார்.
மேலும், சைவ மாணவர்களுக்கு விவிலியப் பகுதிகளை வழங்கும் முயற்சி தொடர்பாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அதனைத் தாங்கள் வன்மையாக எதிர்க்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கல்வி மற்றும் மத சமநிலையைப் பாதுகாப்பது குறித்து பல தரப்பினரிடையே கவனம் அதிகரித்துள்ளது.
Reviewed by Vijithan
on
March 19, 2026
Rating:


No comments:
Post a Comment