மன்னார் நகரசபை மூலம் நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள கடைகளில் ஒப்பந்தத்தை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை- மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன்
மன்னார் நகர சபையினால் வழங்கப்பட்ட கடைகளுக்கு முன் அல்லது நடை பாதையில் எந்த விதமான வியாபாரங்களையும் செய்யக்கூடாது. மேலும் கடைகளில் எவ்வித மாற்றங்களும் செய்யக்கூடாது என்ற நிபந்தனைக்கு கடைகள் வழங்கப்பட்ட போதிலும் நிபந்தனைகளுக்கு எதிராக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக நகர சபை சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக நகர முதல்வர் இன்று (25) மதியம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,,
மன்னார் நகரசபை நீண்ட கால குத்தகைக்கு பல கடைகளை மன்னார் நகர மத்தியிலே கொடுத்திருக்கிறது. இந்த நகர மத்தியிலே கொடுக்கப்பட்டிருக்கின்ற கடை ஒப்பந்தக்காரர்கள் அனைவருக்கும் ஒப்பந்தத்தின் ஊடாக சொல்லப்பட்டிருக்கிறது நீங்கள் உங்கள் கடைக்கு முன் எவ்விதமான வியாபாரங்களையும் நடைபாதையில் செய்யக்கூடாது.அதேபோன்று கடைகளிலே எதுவிதமான மாற்றங்களை நீங்கள் செய்யக்கூடாது.
அவ்வாறு நீங்கள் செய்வீர்கள் என்றால் உடனடியாக கடையை மீள பெறுவதற்கான அதிகாரம் நகரசபைக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்று அவர்களும் ஒப்புக் கொண்டு தான் இந்த ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டு இருக்கிறார்கள்.
ஆனால் மன்னார் நகரில் பல பேர் தங்கள் கடையை விட்டுவிட்டு, கடைகளுக்கு முன்னாலே வியாபாரம் செய்வது, அதேபோன்று ஒலிபெருக்கிகளை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வது, இவ்வாறு பல சட்டவிரோதமான வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
நான் ஆரம்பத்தில் பல கடைகளை, உதாரணமாக மன்னார் பேருந்து நிலையத்துக்கு உள்ளே இருக்கின்ற பல கடைகளை பொலிஸாருடன் இணைந்து அந்த கடைகளை அப்புறப்படுத்துவதற்கு முயற்சித்தேன். அவர்கள் என்னோடு முரண்பட்டு கொண்டார்கள். ஆனால் இப்பொழுது அதே வேலையை பல பேர் செய்கிறார்கள். இப்போது வந்து நிற்கிறார்கள், சட்டவிரோதமாக முன்னாலே கடை வியாபாரம் செய்றாளே தடுங்கள் என்று.
நான் சட்ட நடவடிக்கை எடுக்கும் போது ஒத்து வந்து என்னோடு ஒத்துழைத்திருந்தால், இன்று இவ்வாறு நடவடிக்கைகள் இடம்பெறும் போது என்னால் தடுத்திருக்க முடியும். இப்போது நான் போய் தடுக்கும்போது அவர் என்ன சொல்றார்? அவர் சொல்கிறார் நான் செய்கிறேன், அவர் செய்கிறார் நான் செய்றேன்.உடனடியாக மன்னார் நகரசபை வருமானப் பரிசோதகர்களுக்கு எழுத்து மூலமான அறிவித்தல் கொடுத்திருக்கிறேன்.
இவ்வாறு சட்டத்தை மீறி, ஒப்பந்தத்தை மீறி யார் யார் முன்னாலே வியாபாரம் செய்கிறார்களோ, அவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுத்து கடை களை மீளப் பெற சொல்லி அறிவித்தல் வழங்கியிருக்கிறேன்.
எனவே தயவுசெய்து வியாபாரிகளிடம் நான் வினயமாக கேட்டுக் கொள்கிறேன், உடனடியாக இந்த கடைகளுக்கு முன் நீங்கள் வியாபாரம் செய்வது, பாதசாரிகளுக்கு இடைஞ்சலாக வியாபாரம் செய்வது, சட்டத்தை மீறி உங்கள் கடைகளுக்கு முன் நீங்கள் நகர சபையினுடைய இடத்திலே நீங்கள் வியாபாரம் செய்வது, கடைகளில் நீங்கள் மாற்றங்களைச் செய்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
அல்ல கடுமையான சட்ட நடவடிக்கை பொலிஸாருடன் இணைந்து நான் எடுக்கவிருக்கிறேன். அந்த நேரங்களில் நீங்கள் எங்களோடு மன வருத்தப் பட்டுக் கொள்ளாதீர்கள்.
உடனடியாக உங்களது எல்லைக்குள்ளே உங்களுக்கு ஒதுக்க பட்டிருக்கின்ற கடைக்குள்ளே உங்கள் வியாபாரத்தை செய்யுங்கள். தயவுசெய்து கடைகளுக்கு முன்னாலே வியாபாரம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.
Reviewed by Vijithan
on
June 25, 2026
Rating:


No comments:
Post a Comment