எல் நினோவின் தாக்கம் 2027 ஏப்ரல் வரை நீடிக்கும் என கணிப்பு
தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவு அவதானிக்க வேண்டிய அளவிற்கு உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தற்போது நிலவும் இந்த வறட்சியான வானிலை முடிவடைந்து, போதுமான மழைவீழ்ச்சியை வரும் ஒக்டோபர் மாதத்திலேயே எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும், மொனராகலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
வெளியில் நடமாடும் போது இலகுவான ஆடைகளைப் பயன்படுத்துதல்.
அவ்வப்போது ஓய்வெடுத்தல் மற்றும் முடிந்தவரை அதிகளவில் நீர் அருந்துதல்.
நோயாளிகள் மற்றும் முதியவர்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துதல்.
நாட்டில் தற்போது தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வானிலை நிலவுகிறது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இருப்பினும், வரும் நாட்களில் ஒட்டுமொத்தமாக மழைவீழ்ச்சி குறையும் என எதிர்பார்ப்பதாகப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காற்றின் நிலையைக் கருத்திற்கொள்ளும்போது, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் செப்டம்பர் மாதம் வரை மேலும் வறட்சியான வானிலையே எதிர்பார்க்கப்படுகிறது.
மே முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலத்தில் இந்தப் பகுதிகளில் மழை குறைவது சாதாரண நிலை என்ற போதிலும், 'எல் நினோ' (El Niño) நிலை காரணமாக இது மேலும் தீவிரமடையக்கூடும்.
எல் நினோ நிலையின் தாக்கம் குறித்து தெளிவுபடுத்திய மெரில் மெண்டிஸ் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்:
"இந்த ஆண்டில் நமக்கு இன்னும் எல் நினோ நிலையின் அதிகபட்சத் தாக்கத்தைக் காண முடியவில்லை. ஓகஸ்ட் மாதத்துடன் அதன் வளர்ச்சியை நாம் அவதானிக்க முடியும். எவ்வாறாயினும், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் ஆகும்போது இந்த எல் நினோ நிலை வலுவடையும் சாத்தியக்கூறு 80%க்கும் அதிகமாக உள்ளது. இதன் தாக்கம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கக்கூடும்." என்றார்.
மேலும், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், எல் நினோ நிலையின் தாக்கம் காரணமாக அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் மீண்டும் மழைவீழ்ச்சி குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.
எல் நினோவின் தாக்கம் 2027 ஏப்ரல் வரை நீடிக்கும் என கணிப்பு
Reviewed by Vijithan
on
August 13, 2026
Rating:
Reviewed by Vijithan
on
August 13, 2026
Rating:


No comments:
Post a Comment