அண்மைய செய்திகள்

recent
-

'மாற்றுத்திறனாளிகள் இலக்கியம்' என்ற தனித்துவமான புதுவகை இலக்கியம் பற்றியும் நாம் சிந்திக்கவேண்டும் - தமிழ் நேசன் அடிகளார்


     இலக்கியத்தில் பல வகையான இலக்கியங்கள் பற்றி பேசுகின்றோம். சிறுவர் இலக்கியம், தலித் இலக்கியம், புலம்பெயர் இலக்கியம் என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இன்று நாம் இன்னுமொரு தனித்துவமான புதுவகை இலக்கியம் பற்றியும் சிந்திக்கவேண்டியவர்களாக உள்ளோம். அதுதான் 'மாற்றுத்திறனாளிகள் இலக்கியம்' ஆகும் என மன்னார் கலையருவியின் இயக்குனர் அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார்.
மன்னார் தோட்டவெளியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான பெனில் அவர்களின் 'வலியின் விம்பங்கள்' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமைதாங்கி உரையாற்றும்போதே அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
   மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழ் நேசன் அடிகளார் தொடர்ந்து உரையாற்றும்போது கூறியதாவது, பெனில் அவர்களின் பெரும்பாலான கவிதைகள் அவருடைய வலியின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. விபத்தில் சிக்கி நெஞ்சுப் பகுதிக்குக் கீழே செயல் இழந்துள்ள இவர் சக்கர நாற்காலியிலேயே தன் வாழ்வை நகர்த்துகின்றார். அவருடைய கவிதைகளில் ஒரு மாற்றுத் திறனாளியின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை தரிசிக்க முடிகிறது.
   முன்னார் பயன்பாட்டில் இருந்துவந்த 'வலது குறைந்தோர்,' 'அங்கவீனர்' 'ஊனமுற்றோர்' போன்ற சொற்பிரயோகங்கள் இப்போது வழங்கப்படுவதில்லை. மாறாக 'மாற்றுத் திறனாளிகள்,' 'மாற்றாற்றல் உள்ளோர்'  போன்ற சொற்பதங்களே பாவிக்கப்படுகின்றன. இச்சொற்பதங்கள் அவர்களைப் பற்றி அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. அதேவேளை அவர்களைப் பற்றிய மற்றவர்களின் மனப்பான்மையிலும் மாற்றத்தைக் கொண்டுவருகின்றது.
  போர்க்காலத்திலும் சரி, போருக்குப் பின்னரான காலப்பகுதியிலும் சரி கண் பார்வையிழந்தவர்கள், கை கால்களை இழந்தவர்கள், இன்னும் மாறாத காயங்களோடு வலிகளோடு வாழ்பவர்கள் என பல மாற்றுத் திறனாளிகள் பல இலக்கியங்களைப் படைத்துள்ளனர். இவர்களின் இலக்கியங்கள் தனியான வகையாக நோக்கப்படவேண்டும். அவை தனித்துவமான ஆய்வுக்குரியவையாக கருதப்படபேண்டும். இலக்கிய ஆய்வாளர்கள் எதிர்காலத்தில் இந்த விடயத்தில் தமது அக்கiறையை, கரிசனையை செலுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
'மாற்றுத்திறனாளிகள் இலக்கியம்' என்ற தனித்துவமான புதுவகை இலக்கியம் பற்றியும் நாம் சிந்திக்கவேண்டும் - தமிழ் நேசன் அடிகளார் Reviewed by NEWMANNAR on October 08, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.