அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் காணாமல் போன உறவுகளைக் கண்டறிய உதவும்படி கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம். பட இணைப்பு.,


மன்னார் மாவட்டத்தில் காணமல் போன மற்றும் கடத்தப்பட்ட உறவுகள் கண்டறியப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மன்னார் பிரஜைகள் குழு மற்றும் தேசிய மீனவ ஒத்துளைப்பு பேரவை ஆகியவற்றின் அனுசரணையுடன் காணமல் போன உறவுகளை தேடும் குடும்பங்களின் சமாசம் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று திங்கட்கிழமை மன்னாரில் இடம் பெற்றது.

-உலக மனித உரிமைகள் தினமான இன்று மன்னாரில் குறித்த ஆhப்பாட்டம் இடம் பெற்றது.

கடந்த பல ஆண்டுகளாக கைது செய்யப்பட்டும் இனம் தெரியாதோர் என்ற போர்வையில் கடத்தப்பட்டுள்ள தமது உறவுகளின் இருப்பிடம் இதுவரை அறியப்பட முடியாமல்  உள்ளதுடன் அவர்கள் உயிருடன் உள்ளாரா இல்லையா? என்பது கூட இன்றுவரை மர்மமாகவே வைக்கப்பட்டுள்ளது.

 சட்டத்திற்கு புறம்பாகக் கைது செய்யப்பட்டவர்களை மறைத்து வைத்திருக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதுடன் அவர்களை மீள ஒப்படைப்பதோ அல்லது சட்டத்தின் முன் நிறுத்துவதோ கைது செய்த அதிகாரத் தரப்பின் கட்டாயக் கடமையாயும்,ஜனநாயக ரீதியிலான கட்டாயக் கடமையுமாகும். 
எனினும் இதுவரை இவர்கள் மீள விடுவிக்கப்படவோ சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ இல்லை.

 இவர்களை விடுவித்து உறவினர்களிடம் ஒப்படைக்கும்படியும் அவர்களில் குற்றம் இருந்தால் சட்டத்தின் படி நிறுத்தும்படியும் கோரி குறித்த ஆர்ப்hட்ட பேரணி நடாத்தப்பட்டது.

-இன்று காலை 10 மணியளவில் மன்னார் செபஸ்ரியார் பேராலய மண்ணடபத்தில் விசேட கூட்டம் இடம் பெற்றது.

இதனைத் தொடர்ந்து மன்னார் செபஸ்ரியார் பேராலய முன் ஆரம்பமான பேரணி மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் பஸார் பகுதியைச் சேன்றடைந்து பின் மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது.

இதன் போது காணமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உரவுகளை விடுதலை செய்யும் படி கோசங்களை எழுப்பியதோடு பல வித வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு சென்றனர்.

இதன் போது மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை,உபதலைவர் அந்தோனி சகாயம்,தேசிய மீனவ ஒத்துளைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் சுனேஸ் சோசை, தேசிய மீனவ ஒத்துளைப்பு பேரவையின் அமைப்பாளர் கோம குமார,பௌத்த குறுமார்கள்,அருட்தந்தையர்கள் மன்னார் நகர சபை தலைவர்,உறுப்பினர்கள்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கலான எஸ்.வினோ நோகராதலிங்கம்,சிவசக்தி ஆனந்தன் மற்றும் காணமல் போன உறவினர்கள் என ஆயிரக்கணக்காணவர்கள் கலந்து கொண்டிருநதனர்.









இதன் போது ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் முகமாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.


மன்னாரில் காணமல் போனவர்களை கண்டரியச் செய்யும் முகமாக இன்று மன்னால் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து ஜனாதிபதிக்கு கையளிக்கும் முகமாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட மகஜர்

1990 வன்செயல் தோன்றிய காலம் தொடக்கம் இன்று வரை காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து தருமாறு கோரும் மன்னார் மக்களின் வேண்டுகோள்
1990ம் ஆண்டு வன்செயல் இந்நாட்டில் ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரையான 22 வருடகாலத்தில் பெருந்தொகையான தமிழர்கள் இந்நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். 

இவர்களுள் ஆயதப்படைகளால் கைது செய்யப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டவர்கள, அடையாளம் தெரியாத ஆயுதம் தரித்தவர்களால் கடத்திச்செல்லப்பட்டோர், பொலிசாராலும் ஆயதப்படையினராலும் விசாரணைக்கென்று அழைக்கப்பட்டதின் பேரில், தாமாக படை முகாம்களுக்கும் பொலிஸிற்கும் சென்றவர்கள் என பலவகைப்பட்டோர் அடங்குகின்றனர். மேலும் வன்னிப்போரின்போது வன்னியில் குடியிருந்தவர்களாக அரசு பதிவேடுகளில் காணப்பட்டவர்களின் தொகைக்கும் போரின் பின் முகாம்களில் தடைப்படுத்தி வைக்கப்பட்ட மக்களின் தொகைக்கும் இடையில் காணப்படும், வித்தியாசம்; 146,000 பேருக்கும் மேலானதாகும். இந்த 146,000 பேரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுள் அடங்குவர். இவர்களுள் எமது மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளும் அடக்கப்பட்டுள்ளனர். 

இக்கணக்கின்படி எமது மன்னார் மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் எம்மிடமுள்ள கணக்குகளின் விபரம் வருமாறு:

:-1990 முதல் 2012 வரை காணாமல் ஆக்கப்பட்ட 600 க்கு மேற்பட்டோர்.

:- கைது செய்யப்பட்டு காணாமல் போனோர் 300க்கு மேற்பட்டோர். 

:- சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டோர்.100க்கு மேற்பட்டோர். 

:-இன்னமும் தடுப்பு முகாம்களில் மீளக்குடியமர அனுமதியின்றி           அடைக்கப்பட்டுள்ளோர்.  200 க்கு மேல் 

:- பதிவு செய்யப்பட்ட வழக்குகள் காரணமாக சிறையிலிருப்போர். 20க்கு மேல் 

கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக, இவர்களை மீட்கும் முயற்சியாக நாம் பொலிஸ் படைத்தரப்பு, அரச அதிபர்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமை ஆணைக் குழுக்கள், ஜனாதிபதி ஆணைக்குழுக்கள், என்பவற்றிற்கு செய்யப்பட்ட முறைப்பாடுகளும் அவர்களால் அழைக்கப்பட்டு நாம் பல தடவைகளில் முகம்கொடுத்த விசாரணைகளும் இதுவரை எவ்வித பயனையும் தராமையால் மனைவிகள் கணவர்களை இழந்தும், பெற்றோர், பிள்ளைகளை இழந்தும், நண்பர்கள் உறவுகளை இழந்தும், நாங்கள் கண்ணீரும் கவலையுமாக வாழ்ந்து வருகிறோம்.

இந்த இழப்புகளுக்கு காரணமான யுத்தமும் அதனை முன்னெடுத்த அரசும் அப்பாவி மக்களின் இக்கவலைகளையிட்டு எவ்வித அக்கறையுமில்லாதுள்ளனர். இவர்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்பதைக் கூட மூடி மறைத்து எங்களை அங்கலாய்ப்பில் தவிக்க விட்டுள்ளனர்.

எம்மால் இழக்கப்பட்ட இந்த உறவுகள் பற்றிய எமது கவலையைத் திசைதிருப்பவோ என்னவோ அரசு எம்மீது வேறு பல சுமைகளையும் தொடர்ந்தும் சுமத்தி வருகிறது – 

1. மீளக்குடியமர்ந்தவர்களுக்கு உரிய நிவாரணமோ வேலை வாய்ப்புக்களோ, வழங்கப்படவில்லை.
2. பல நூற்றுக்கணக்கானோருக்கு அவர்களது சொந்த நிலத்தில் மீள்குடியமர அனுமதி வழங்கப்படாது காடுகளிலும் வளமற்ற தரிசு நிலங்களிலும் அந்தரிக்க விடப்பட்டுள்ளனர்.

3. காணியுரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதுடன் வளமான நிலங்களும் இராணுவத் தேவைக்கும் தென்பகுதி மக்கள் குடியேற்றத்திற்குமாக கையகப்படுத்தப்பட்டுள்ளன.

4. தமிழ் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி கரையோரங்களில் படையினரின்  உதவியுடன் வேற்றிடத்தவர்கள் குடியமர்த்தப்பட்டு தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் சூறையாடப்பட்டுள்ளது.

5. தமிழ்ப்பகுதிகளில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்தை ஏற்படுத்தி மக்களது இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டள்ளது.

6. பொது மக்களின் வீடுகளும் வணக்கஸ்தலங்களும் படைத் தரப்பினால் ஆக்கிரமிக்கப்பட்டு யுத்தம் முடிந்த பின்னரும் அகதி வாழ்க்கை வாழும் அவல நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

7. தமிழ் மக்கள் அன்றாட பொது விடயங்களில் கூட படைத்தரப்பின் தலையீடு இருப்பதால் மக்களின் இயல்;பு நிலை முழுமையாக தடைப்பட்டுள்ளது.

8. ஒட்டு மொத்தமாக ஒரு இன அழிப்பு மௌன யுத்தம்; படைத்தரப்பு மூலம் தமிழ் மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ளது. 

இறுதி யுத்த நாட்களில் சிறியதொரு நிலப்பரப்புள் முடக்கப்பட்ட மக்கள் கொத்துச் கொத்தாக குடும்பம் குடும்பமாக அழிக்கப்பட்டபோது அடைந்ததைவிட மிக அதிகமான துயரத்தை எமது உறவுகளின் இருப்பையோ, இறப்பையோ அறியாமல் இருப்பதன் மூலம் அனுபவித்து வருகிறோம்.

இந்த துன்பத்தை நீக்க நாட்டின் அதி உயர் அதிகார தலைவராகிய தாங்கள் உண்மை நிலையைத் தெளிவுபடுத்தி எமது அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு பணிவுடன் இரந்து வேண்டுகின்றோம்.
மன்னாரில் காணாமல் போன உறவுகளைக் கண்டறிய உதவும்படி கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம். பட இணைப்பு., Reviewed by NEWMANNAR on December 10, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.