இலங்கையில் இருந்து புலம்பெயர் மக்களிடம் பேசுவோர் கண்காணிப்பில்! பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பு
யுத்தம் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் மனித உரிமை நிலைமைகள் மேம்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் தமிழீழ விடுதலைப் புலி என சந்தேகிக்கப்பட்டவர்களின் புகலிடக் கோரிக்கைகள் குறித்து சரியான முறையில் ஆராய வேண்டுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பிரித்தானிய குடிவரவு நீதிமன்றம், புகலிடம் வழங்குவது தொடர்பில் புதிய சில வகையீடுகளை அறிமுகம் செய்துள்ளது.
புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சாட்சிய மளித்தவர்கள் போன்றோர்களுக்கான புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களை ஆராய்வதற்கு விசேட வழிகாட்டல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரித்தானிய குடிவரவு நீதிமன்றின் இந்த உத்தரவு அந்நாட்டு உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட சகல நீதிமன்றங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தீர்ப்பானது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என குடிவரவு சட்டத்தரணி அருண் குணரட்னம் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 15 புகலிடக் கோரிக்கையாளர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடு கடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கை அதிகாரிகள் உடனடியாக கைது செய்வதில்லை எனவும் சில நாட்களின் பின்னர் அவர்களது வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புலம்பெயர் மக்களுடன் இணையம் மற்றும் கையடக்கத் தொலைபேசி மூலம் தொடர்புகளைப் பேணி வருவோர் பற்றி புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
யுத்த காலத்தை விடவும், சமாதான காலத்தில் காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக பிரித்தானிய குடிவரவு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து புலம்பெயர் மக்களிடம் பேசுவோர் கண்காணிப்பில்! பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பு
Reviewed by Admin
on
July 10, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment