வரதட்சணைக் கொடுமையினால் தமிழக அகதி முகாமில் தீக்குளித்து இறந்த மன்னாரை சேர்ந்த வித்யா! அதிர்ச்சித் தகவல்கள் (Photos)
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் காரையூர் ஈழ அகதி முகாமில்
வசித்து வருபவர் முத்துக்கிருஷ்ணன், இவரது மனைவி பொன்னம்மாள் இவர்களது 25 வயதான மகள் வித்தியாவிற்கும் சிவகங்கை மாவட்டம் மானகிரி கிராமத்தை சேர்ந்த 28 வயதான பாண்டிகண்ணன் என்பவருக்கும் 2 வருடத்துக்கு முன் பெற்றோர்கள் பேசி திருமணம் முடித்து வைத்துள்ளர்கள்.
இவர்கள் இலங்கையில் மன்னார் மாவட்டம் ஆழ்காட்டிகுழி கிராமத்தைப் பூர்வீகமாக கொண்டவர்கள்.
வித்யா பாண்டிகண்ணன் தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை ஒன்று உள்ளது..
நீங்கள் எல்லாம் தொப்புள் கொடி உறவுகள் என்று கூறி நம்பவைத்து கழுத்தறுத்து விட்டார் தமிழக மாப்பிள்ளை.
துயரச் சம்பவம் நடந்த 19.06.2013 அன்று வித்யா ஈழ அகதிமுகாமில் (காரையூர்) தனது அம்மா வீட்டில் யாரும் இல்லாதபோது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சேர்துள்ளனர்.
வித்யாவின் உடல் நிலைமை மோசமாக இருந்ததால்
மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.
சிகிச்சை பலனின்றி வித்யா 05.07.2013 அன்று இறந்துவிட்டார்.
வித்யா இறப்பதற்கு முன் தனது சாவுக்கு காரணமானவர்களை பெயர் பட்டியலிட்டு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தை படித்து கொதித்து போன காரையூர் முகாம் மக்கள் வித்யாவின் சாவுக்கு காரணமாக இருந்த
வித்யாவின் கணவன் பாண்டிகண்ணன் மாமியார் ரேவதி சின்ன மாமியார் பத்மா, நாச்சியா பெரிய மாமியார் வள்ளி மைத்துனன் பாஸ்கரன் ஆகியோரை கைதுசெய்ய கோரி பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என ஒட்டு மொத்த முகாம் மக்களும் சேர்ந்து அந்த முகாமிற்கு எதிரில் உள்ள திருப்பத்தூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் துணை போலிஸ் சூப்பிரண்டு மதுரைசாமி, தாசில்ந்தார் அமிர்தலிங்கம், கண்டவராயன்பட்டி சப் இன்ஸ்பெக்டர் முத்தையா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
வித்யாவின் சாவுக்கு காரணமானவர்களை 7 நாட்களுக்குள் கைது செய்வோம் என்று திருப்பத்தூர் துணை போலிஸ் சூப்பிரண்டு மதுரைசாமி வித்யாவின் அம்மா தலையில் கைவைத்து சத்தியம் செய்து கொடுத்தார். அதன் பின் பஸ் மறியல் கைவிடப்பட்டது.
வித்யாவின் மரணம் பற்றி வித்யாவின் அப்பா முத்துக்கிருஷ்ணன் தமிழ் சி.என்.என் இணையத்துக்கு அளித்த கண்ணீர் பேட்டி,
எனது மகள் பிளஸ் 2 படித்து நர்சிங் முடித்துவிட்டு திருப்பத்தூர் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வந்தார்.
கடந்த 2011 ம் ஆண்டு பாண்டிகண்ணன் (வித்யாவின் சாவுக்கு காரணமான கணவன்) என்பவன் அவனது அம்மா ரேவதி மற்றும் அவனது உறவினர்களுடன் வந்து பெண் கேட்டான்.
எங்கள் நாடு நல்ல நிலைமைக்கு வந்தவுடன் நாங்கள் அங்கு சென்று விடுவோம். அதனால் இது சரிப்பட்டு வராது என மறுத்து விட்டேன்.
நீங்கள் எல்லாம் எங்கள் தொப்புள் கொடி உறவுகள் என்று கூறி நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார்கள்.
மறுபடி மறுபடி வந்து நாங்கள் வரதட்சணை கேட்கமாட்டோம். உங்கள் பெண்ணை மட்டும் அனுப்புங்கள் என வற்புறுத்தி மிகவும் நல்லவர்கள்போல் நடித்து எனது சம்மதத்தை வாங்கிவிட்டார்கள்.
09.02.2011 அன்று திருமணம் செய்து வைத்தோம் . அதன் பின் உங்கள் மகளுக்கு நீங்கள் ஏதாவது வரதட்சணை சீர் செய்யுங்கள் என்று வற்புறுத்தினார்கள்.
இலங்கையில் உள்ள எனது காணியை விற்று 10 பவுன் நகை 1 லட்சம் ரொக்கப்பணம் 1 லட்ச ரூபாவுக்கு சீர் வரிசை பொருள்கள் கொடுத்தோம்.
அது போதாது என்று அடிக்கடி எனது மகளை துன்புறுத்தி வந்துள்ளார்கள்.
நெருப்பால் சூடு போடுவது, கட்டி வைத்து அடிப்பது சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போடுவது, என்று எத்தனையோ சித்திரவதைகளை செய்துள்ளார்கள். (கண்கள் கலங்கி பேசமுடியாமல் பின்னர் ஆசுவாசபடுதிக் கொண்டு தொடர்கிறார்…)
தமிழக மாமியார் வீட்டில் இந்தப் பெண்ணுக்கு நடந்த சித்திரவதைகள் அனைத்தும் இலங்கைப் படைகள் தமிழ் மக்களுக்கு செய்த சித்திரவதைகளை விட பாரதூரமாக உள்ளது.
10 நாட்களுக்கு முன் திவ்யாவை பாண்டிகண்ணன் அடித்து முன்வரிசை பல் எல்லாம் உடைத்து அவனது அம்மா ரேவதி, சிறிய தாயார் பத்மா நாச்சியா, பெரிய தாயார்
வள்ளி ஆகியோரும் சேர்ந்து திவ்யாவை அடித்து உதைத்து குழந்தையையும் கொடுத்து 1 லட்சம் வாங்கிவா என விரட்டிவிட்டார்கள்.
இந்த வயதான காலத்தில் எந்த வேலையும் இல்லாமல் இருக்கும் நான் தமிழக அரசு முகாமில் தரும் நிவாரண உதவியை வைத்துதான் எங்களது சாப்பாட்டு பிழைப்பே
நடக்கிறது.
நான் எப்படி 1 லட்சம் ருபாயை ஏற்பாடு பண்ணிக் கொடுப்பது?
விரக்தியடைந்த மகள் நாங்கள் யாரும் இல்லாத நேரத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு இப்படி செய்து விட்டாள். இந்த பச்சைக் குழந்தையை எப்படி நான் வளர்ப்பது…?
(என்று மறுபடியும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்…)
தமிழக காவல் துறை எனது மகளின் வாழ்க்கையை நாசமாக்கிய அந்த பாவிகளை கைதுசெய்து தகுந்த தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.
நான் வரதட்சணையாக கொடுத்த அனைத்தையும் பணமாக அவர்களிடமிருந்து வாங்கி எனது பேத்திக்கு (வித்யாவின் மகள்) கொடுக்க வேண்டும்.
என்று கண்ணீருடன் அவர் கூறியபோது அவரது மனைவி பொன்னம்மாள் மற்றும் கரையூர் முகாம் மக்கள் பலர் அருகில் இருந்து தேற்றினர்.
முகாமில் பல்வேறு கஷ்டங்களுக்கும் மத்தியில் பெண்ணை படிக்கவைத்து அதற்கு மேலும் நோயாளிகளைக் காக்கும் தெய்வங்களான நர்ஸாக உருவாக்கிய அந்த தந்தையால் மேற்கொண்டு பேச எதுவும் முடியவில்லை.
வரதட்சணைக் கொடுமை புரிந்து அப்பாவிப் பெண்ணின் அவலச் சாவுக்கு காரணமான கொடூர மனம் படைத்த தமிழக மாப்பிள்ளை பாண்டிக்கண்ணன் மற்றும் அவரது உறவுகளுக்கு கடுமையான தண்டனை வழங்கி சிறையில் தள்ள வேண்டும்.
இப்பிரச்சினையில் தமிழக அரசு நேரடியாகத் தலையிட வேண்டும்.
இலங்கையில் உயிருக்கு பயந்து இங்கே வந்தும் இப்படி ஒரு நிலை… எலி வாயில் தப்பி புலிவாயில் மாட்டிய கதையாகத் தான் மேற்படி சம்பவம் அமைந்துள்ளது.
தமிழக காவல் துறையில் பணியாற்றும் சிலர் ஈழத்தமிழர்களை கிஞ்சித்தும் மதிக்காமல் அவர்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத நிலை தொடர்ந்து வருகின்றது.
இவர்கள் அகதிகள் தானே என காவல்துறை அலட்சியம் காட்டுமா?
அல்லது சட்டம் தன் கடமையை செய்யுமா?
வித்யாவின் மரண வாக்குமூலத்துக்கு நீதி கிடைக்குமா?
தமிழ் CNN
வரதட்சணைக் கொடுமையினால் தமிழக அகதி முகாமில் தீக்குளித்து இறந்த மன்னாரை சேர்ந்த வித்யா! அதிர்ச்சித் தகவல்கள் (Photos)
Reviewed by Admin
on
July 09, 2013
Rating:

No comments:
Post a Comment