அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் தேசியக்கூட்டமைப்பு மன்னார் மாவட்ட முதன்மை வேட்பாளர் வைத்தியகலாநிதி ஜி.குணசீலனுடன் ஒரு நேர் காணல்

கேள்வி:- மன்னார் மாவட்டத்தில் முறையான மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ளதா? மீள் குடியேற்றப்பட்ட மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா?

பதில் -மன்னார் மாவட்டத்தில் முறையான மீள் குடியேற்றம் நடைபெற்றுள்ளது என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.அத்துடன் மீள் குடியேற்ற செயற்பாடுகளில் எமது தமிழ் மக்கள் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளனர் என்பதே உண்மை.
மேலும் கூறுவதாயின் எமது மக்கள் அவர்களுடைய சொந்தப்பிரதேசங்களில் அடிப்படை வசதிகள் இன்றி அனாதரவாக இறக்கி விடப்பட்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை நிலை.
மேலும் மீள் குடியேற்றப்பட்ட மக்களினுடைய வாக்காளர் பதிவுகள் உரியமுறையில் மேற்கொள்ளப்படவில்லை .இது தமிழ் பேசும் மக்களின் பெரு வெற்றியை தடுக்கும்  அரசாங்கத்தின் ஒரு முயற்சியாக கருதலாம்.



கேள்வி:- தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் இராணுவ புலனாய்வு பிரிவினர்களால் அச்சுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. அவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு நீங்கள் முகம் கொடுத்துள்ளீர்களா?

பதில்-தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்கள் பல வகையில் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர்.அவர்கள்  நேரடியாகவும்,சில சந்தர்ப்பங்களில் அவர்களுடைய குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோரை  அச்சுறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
மன்னார் மாவட்டத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் சில பகுதிகளில் நடைபெற்றுள்ளது என்பது உண்மை.குறிப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்காக தேர்தல் பணி புரிபவர்கள் அச்சுறுத்தப்படுவதோடு அவர்களுடைய விவரங்களும் திரட்டப்படுகின்றன.
  இது ஜனநாயக சுதந்திரமான தேர்தல் நடைபெறுமா? என்ற அச்சத்தை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
 
கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசார நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்ளக் கூடியதாகவுள்ளதா? அவ்வாறில்லாவிட்டால் தடையாக இருப்பது யார்?

பதில் -சுதந்திரமாக பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை காணப்படவில்லை என்றே கூறலாம்.
.அரசாங்க சார்புள்ள பல்வேறு பகுதியினரும் வேறு வழிகளில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சுதந்திரமான பிரச்சார நடவடிக்கைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.உண்மையைக்கூறுவதாக இருந்தால் அரசாங்கம் தன்னிடமுள்ள சகல சக்திகளையும் முடுக்கிவிட்டுள்ளது என்பதே உண்மை.

கேள்வி:- அரசாங்க இலவசங்களும் தொழில் வாய்ப்புக்களும் அபிவிருத்தித் திட்டங்களும் துரித கதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறதே இதனால் கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமா?

பதில் -இக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.  வடக்கில் மேற்கூறிய செயல்திட்டங்கள் சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதுடன் இவ்வாறான கண்துடைப்பான அபிவிருத்தி திட்டங்களின் மூலம் தமிழ் தேசிய உணர்வை எம் மக்களிடம் இருந்து மழுங்கடிக்கவே அரசாங்கம் முனைகின்றது.
அபிவிருத்தித்திட்டங்கள் என்பது மக்களுக்கு செய்ய வேண்டிய அரசாங்கத்தின் கடமையே தவிர இவை சலுகைகள் ஆகாது.
தமிழ் மக்கள் தேசிய உணர்வை எந்த ஒரு சலுகைக்கும் விற்க மாட்டார்கள். எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பெரு வெற்றி நிச்சயம் என்பதே உண்மை.

கேள்வி:- சட்டவிரோத தேர்தல் நடவடிக்கைகள் கூட்டமைப்புக்கு எதிரான செயற்பாடுகள் ஏதேனும் குறித்து தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடுகள் செய்துள்ளீர்களா?

பதில் -கூட்டமைப்பு எதிரான இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அரசியல் தலைவர்களிடம் நான் அறிவித்துள்ளேன்.இது தொடர்பான நடவடிக்கைகளை தேர்தல் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு மேற்கொள்ளுவார்கள்.

கேள்வி:- நீங்கள் அரசியலுக்கு வருவது இதுதான் முதன் முறையா? தமிழ் கூட்டமைப்பின் அங்கத்தவராக ஏற்கனவே இருந்துள்ளீர்களா?


பதில் -ஆம்.நான் அரசியலுக்துள் நுழைவதும்,கூட்டமைப்பில் அங்கத்துவன் ஆவதும் இது தான் முதல் தடவை.ஆனால் தமிழ் தேசிய உணர்வுள்ள தமிழர்களின் அங்கத்தவனாக நான் எப்போதும் இருந்துள்ளேன்.

கேள்வி:- இதற்கு முன்னர் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?

பதில் -நான் சுகாதார அமைச்சில் ஒரு வைத்திய அதிகாரியாக கடமையாற்றிக்கொண்டிருந்தேன்.எனது சேவைக்காலத்தில் வைத்தியசாலைகளிலும்,இறுதியாக மன்னார்,மாந்தை மேற்கு,மடு பிரதேச செயலாளர் பிரிவுகளில் சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் மன்னார் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிட வேண்டி எனது அரச வைத்தியர் பதவியை இராஜீனாமா செய்து ஒரு வேட்பாளராக மக்கள் முன் நிற்கின்றேன்.
எனது சேவைக்காலத்தில் குறிப்பாக சுகாதார வைத்தி அதிகாரியாக பணிபுறிந்த காலப்பகுதியில் சுகந்திரமாகவும்,நீதியாகவும் ,பக்கச்சார்பின்றியும் பணியாற்றக்கூடிய நிலை மறுக்கப்பட்டதை என்னால் உணர முடிந்தது.
எனது சேவையில் பலதரப்பட்ட தடைகளுக்கும்,முட்டுக்கட்டைகளுக்கும்,அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுத்தேன்.ஆகவே மருத்துவராகிய நான்   அரசியல் களத்தில் இணைந்து கொள்ளுவதன் மூலம் எம் மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய அதிகாரமும்,சந்தர்ப்பமும் கிட்டும் என நான் நம்புகின்றேன்.

கேள்வி:- இந்த வடமாகாண சபைத் தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் நடத்தப்படும் என்று நீங்கள் நம்புகின்றீர்களா?

பதில் -இது தொடர்பான பல்வேறுபட்ட கருத்துக்களும்,ஐயப்பாடுகளும்,கேள்விகளும்,எமது தமிழ்  மக்கள் மத்தியிலும்,சர்வதேச நாடுகளின் மத்தியிலும் எழுந்துள்ளது.
எவ்வாறாயினும் இத்தேர்தலானது நீதியானதாகவும்,நேர்மையாகவும் நடாத்தப்படுவதன் மூலம் எம் மக்களுக்கான ஜனநாயக உரிமைகள் பெற்றுக்கொள்ளப்படுவதற்கான ஒரு ஆரம்ப வாய்ப்பாக இது அமைய வேண்டும் என்பதே ஒட்ட மொத்த தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இவ்விடையத்தில் சர்வதேச நாடுகள் கரசனை கொண்டு இத்தேர்தலை நீதியாகவும்,நேர்மையாகவும் நடாத்துவதற்கு சகல வழியிலும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே சர்வதேசத்திடம் எனது வேண்டுகோளாகும்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு மன்னார் மாவட்ட முதன்மை வேட்பாளர் வைத்தியகலாநிதி ஜி.குணசீலனுடன் ஒரு நேர் காணல் Reviewed by Admin on August 18, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.