மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சி இரண்டு ஆசனங்களை கைப்பற்றும்- தலைமை வேட்பாளரர் ஏ.எஸ்.எம்.பஸ்மி
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
மன்னார் மாவட்ட மக்கள் நடைபெறவுள்ள மாகாண சபைத்தேர்தல் மூலம் தமக்கு ஏற்பட்ட துரோகங்களுக்கும்,கழுத்தறுப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவுள்ளனர்.
அண்மைக்காலங்களாக அரசியல் வாதிகளினால் மன்னார் மாவட்ட மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
முன்னைய தேர்தல் காலங்களில் பல வாக்குறுதிகளை கொடுத்து மக்களின் வாக்குகளை சூறையாடி பாராளுமன்ற உறுப்பினர் பதவியினையும்,அமைச்சுப்பதவியினையும் பெற்றுக்கொண்டவர்கள் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் குறைந்தபட்சத்தினைக்கூட இது வரை நிறைவேற்றவில்லை.
புதிய வேலைவாய்ப்பு,அபிவிருத்தி,வீட்டுத்திட்டம்,சிறையில் உள்ள உறவுகளை மீட்டெடுத்தல்,பொருளாதார நிலையை உயர்த்துதல் போன்ற போலி வாக்குறுதிகளை மன்னார் மக்களுக்கு வழங்கி கடந்த காலங்களில் வாக்குகள் சூறையாடப்பட்டுள்ளது.
எனினும் இம்முறை மன்னார் மாவட்ட மக்கள் மிகவும் தெளிவான மனநிலையில் உள்ளனர்.எதிர்வரும் தேர்தலில் தம்மை வஞ்சித்த அரசியல் கொள்கையாளர்களை அரசியல் களத்திலிருந்து துடைத்தெறிய கங்கணம் கட்டியுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்,முஸ்லிம் விவசாயிகள் தற்போழுது நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வங்கிகளில் கடன் பெற்று நெற்செய்கையில் ஈடுபட்டு வரட்சியினாலும்,மழை வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்ட குறித்த விவசாயிகளின் நிலை தொடர்பில் இது வரை மன்னாரை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரோ,அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களோ எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பல பெறுமதியான மரங்கள் செல்வாக்கு மிக்க ஆளும் தரப்பு அரசியல் வாதிகளினால் வெட்டப்பட்டு தென்பகுதிகளுக்கு கடத்தப்படுகின்றது.
இது மட்டுமின்றி இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டத்தில் தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு மிக மோசமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது.குறித்த வீட்டுத்திட்டத்திற்கு ஒரு அரசியல் பிரமுகரின் ஆதரவாளர்களுக்கே அதிக முக்கியத்துவவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது போன்று மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்,முஸ்லிம் மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மீன் பிடி படகுகள் மற்றும் வெளி இணைப்பு இயந்திரம் ஆகியவை உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவில்லை.
கடந்த காலங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினருக்கு தமது வாக்குகளை வழங்கிய மக்களுக்கு அரசாங்கம் பாரிய துரோகத்தினை இழைத்துள்ளது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த வடமாகாண சபைத்தேர்தலை மதிநுட்பத்துடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மோசடி பேர்வழிகளையும்,அரசியல் கொள்ளையர்களையும் அரசியல் அரங்கில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். இன்று நாட்டில் வசிக்கும் அனைத்து முஸ்லிம் மக்களும் பெரும் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதற்கு வெகுமதியாக முஸ்ஸிம் மக்களின் பள்ளி வாசல்கள் அடித்துடைக்கப்பட்டுள்ளது.சிறுபான்மையின முஸ்ஸிம்கள் மீது என்றும் இல்லாத அளவு அடக்குமுறை பிரையோகிக்கப்படுகின்றது.தற்போழுது மன்னார் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட மக்களின் ஏகமனதான தெரிவாக ஐக்கிய தேசியக்கட்சி விளங்குகின்றது.மன்னார் மாவட்டத்தில் உள்ள சகல பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் உள்ள பல ஆயிரக்கணக்காண மக்கள் தமது ஆதரவினை ஐக்கிய தேசியக்கட்சிக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.
எனவே எதிர் வரும் வடமாகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சி அதிகூடிய வாக்குகளைப்பெற்று இரண்டு ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் என மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் தலைமை வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் ஏ.எஸ்.எம்.பஸ்மி மேலும் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சி இரண்டு ஆசனங்களை கைப்பற்றும்- தலைமை வேட்பாளரர் ஏ.எஸ்.எம்.பஸ்மி
Reviewed by Admin
on
August 17, 2013
Rating:
No comments:
Post a Comment