சவேரியார் புரம் கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் மீட்பு- 2 மீனவர்களை காணவில்லை.- படங்கள்
மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சவேரியார் புரம் கடற்பரப்பில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை கடலுக்குச் சென்ற மீனவர்களின் படகு ஒன்று கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் இருவரின் நிலை இதுவரை தெரியவில்லை என சவேரியார் புரம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த மக்கள் மேலும் தெரிவிக்கையில்,,,
சவேரியார் புரம் கிராமத்தைச் சேர்ந்த மார்க்கண்டு லோரண்ஸ்(வயது-38) அவருடைய மகன் லோரன்ஸ் லதீஸ்(வயது-19) மற்றும் அக்கிராமத்தைச் சேர்ந்த லிங்கதுரை சுரேஸ்(வயது-19) ஆகிய மூன்று பேரும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை கண்ணாடியிழைப்படகு ஒன்றில் தொழிலுக்குச் சென்றுள்ளனர்.
எனினும் இவர்கள் அன்றைய தினம் மாலையாகியும்கரை திரும்பவில்லை.
இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை காலை மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தில் இருந்து கடல் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் காணப்பட்ட மார்க்கண்டு லோரண்ஸ்(வயது-38) என்பவரை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் தாம் பயணித்த படகு கடலில் கவிழ்ந்ததாகவும்,ஏனைய இருவருடைய நிலையும் இது வரை என்னவென்று தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மீட்கப்பட்டவர் தொடர்ந்தும் மன்னார் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்களை தேடும் பணியில் சவேரியார் புரம் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே வேளை குறித்த படகில் பற்றை வைத்து கணவாய் பிடிப்பதற்கு பற்றைகள் மற்றும் மண் மூடைகள் அதிகளவில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இதனாலேயே குறித்த படகு கவிழ்ந்திருக்கலாம் என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை மாலை வரையும் குறித்த மீனவர்கள் தொடர்பில் எவ்வித தகவழ்களும் கிடைக்கவில்லை எனவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
சவேரியார் புரம் கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் மீட்பு- 2 மீனவர்களை காணவில்லை.- படங்கள்
Reviewed by Admin
on
October 06, 2013
Rating:
No comments:
Post a Comment