வட மாகாணசபையினை எமது கட்சியான EPRLF புறக்கணிக்கவில்லை –
'வட மாகாணசபையினை எமது வட மாகாணசபையினை எமது கட்சியான EPRLF புறக்கணிக்கவில்லை – மாறாக, இன்று நடைபெற்ற பதவியேற்பு வைபவத்தினையே நாங்கள் புறக்கணித்தோம்' என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
இன்று யாழில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் மாகாணசபைக்கான பதவியேற்பு வைபவத்தில், மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் பங்குபற்றாமை தொடர்பில் அக்கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில்...
'கூட்டமைப்பு என்பதன் பதம் அனைவருக்கும் நன்கு தெரியும். ஒரு கூட்டமைப்பில் உள்ளவர்களின் முடிவுகள் எப்படி அமையவேண்டும் என்பது பற்றியும் யாவரும் அறிவர். அதாவது எதேட்சாதிகார போக்கில் தனிப்பட்ட முடிவினை எவரும் எடுக்க முடியாது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற அனைத்து கட்சிகளின் சம்மதத்திற்கிணங்கவே முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் மேலாதிக்க ரீதியான, தனிப்பட்ட முடிவுகளே எட்டப்பட்டு வருகின்றன'
தேர்தல் காலத்தில் ஒன்றாக பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டு, தேர்தல் வெற்றியின் பின்னர் மக்கள் தந்த ஆணையினை துஸ்பிரயோகம் செய்வதை எமது கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது சம்பந்தன், சுமந்திரன், விக்னேஸ்வரன் ஆகியோரை மாத்திரம் உள்ளடக்கிய கட்சியல்ல என்பதை கூட்டமைப்பின் தலைமை உணர மறுக்கிறது.
அடக்கப்பட்டிருந்த மக்களின் அபிலாஷைகளை தமது வாக்கு என்னும் ஆயுதத்தினால் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆறில் ஐந்து பெரும்பான்மை வெற்றிபெற்றிருக்கிறது. இவ்வெற்றியானது கூட்டமைப்பில் இருக்கின்ற தமிழரசுக் கட்சியினால் மாத்திரம் பெறப்பட்டதல்ல. அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பும் இந்த வெற்றிக்கு வித்திட்டிருக்கின்றன.
ஆனால், அமைச்சர்களின் தெரிவில் எமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் சுயேட்சையாக முடிவெடுப்பதென்பது எவ்வகையில் நியாயம். நான்கு அமைச்சுக்களையும் நான்கு கட்சிகளுக்கு பிரிந்துக் கொடுங்கள் என்று நாங்கள் கூட்டமைப்பின் தலைமையிடம் கேட்டோம். ஆனால், தமிழரசுக் கட்சிக்கு 2 அமைச்சுக்கள் வேண்டுமென சம்பந்தன் ஒற்றைக் காலில் நின்றார். அதுமட்டுமல்லாமல் எமது கட்சிக்கு வழங்கவேண்டிய அமைச்சுப் பதவியை முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட எமது உறுப்பினருக்கு வழங்கும்படி பரிந்துரைத்தோம். ஆனால், அதனையும் கூட்டமைப்பின் தலைமை நிராகரித்து, ஐங்கரநேசனை அமைச்சராக அறிவித்தார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ - அமைச்சு ஆசைகளைக் காட்டி எதிர்க்கட்சியினரை வளைத்துப் போடுவதுபோல், கூட்டமைப்பின் தலைமையும் செயற்பட பார்க்கிறது. இது, கூட்டமைப்பின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.
அதுமட்டுமல்லாமல், தேர்தலுக்காக இரவு பகலாக கஷ்டப்பட்ட பலர் வடக்கில் இருக்கும்போது, கொழும்பிலுள்ள சிலரை ஆலோசகர்களாக உள்வாங்கவும் முதலமைச்சர் முடிவுசெய்திருக்கிறார். இதனால் வடக்கிலுள்ள மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கவுள்ளது? இங்கு கஷ்டப்பட்டவர்கள் சும்மா இருக்க, கொழும்பிலிருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை என்றால் இதில் என்ன நியாயமிருக்கிறது?
இதுபோன்ற பல தவறுகளை கூட்டமைப்பின் தலைமை மேற்கொண்டு வருவதை தட்டிக்N கட்கின்ற எம்மை குழப்பவாதிகளாக ஊடகங்களும் தமிழரசுக் கட்சி விஸ்வாசிகளும் சித்திரிப்பது வேடிக்கையானதே. நாங்கள் ஒற்றுமையாக சேர்ந்து செயலாற்ற தயாராக இருக்கின்றோம். அதற்காகத்தான் மக்கள் எம்மை ஆதரித்திருக்கிறார்கள். ஆனால், அதனை கூட்டமைப்புக்குள் உள்ளிருக்கும் அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். அதனைவிடுத்து, ஏதேச்சாதிகார போக்கில் தன்னிச்சையான முடிவுகளை கூட்டமைப்பின் தலைமை எடுக்குமேயானால், இதன் பின்விளைவுகளுக்கும் அவர்களே பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.
எமது கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட்டவர்கள் நிச்சயமாக பதவிப்பிரமாணம் எடுப்பார்கள். அத்தோடு தங்களாலான அனைத்து உதவிகளையும் மக்களுக்குச் செய்வார்கள் என்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்' என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டார்.
வட மாகாணசபையினை எமது கட்சியான EPRLF புறக்கணிக்கவில்லை –
Reviewed by NEWMANNAR
on
October 12, 2013
Rating:

No comments:
Post a Comment