பல்கலைக்கழகத்தை ஆரம்பியுங்கள்: யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தல்
எந்தவித காரணங்களும் இன்றி யாழ்.பல்கலைக்கழக செயற்பாடுகள் இரு வாரங்களுக்குத் தடைப்படுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே 18 ஆம் திகதி பல்கலைக்கழகக் கல்விச் செயற்பாடுகள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு 11 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை அனைத்துப் பல்கலைக் கழகங்களினதும் கல்விச் செயற்பாடுகளை நிறுத்துமாறு யாழ். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. அத்தோடு பல் கலைக்கழக மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இது அனைத்துப் பல்கலைக்கழகங்களும் பொதுவான ஒன்றாகும்.
ஆனால், யாழ். பல்கலைக்கழத்துக்கு மட்டும் எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்தக் காலப்பகுதியில் மாணவர்கள் விடுதிகளில் தங்கியிருக்கவும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்குப் பெரும் தடையாக உள்ளது. குறிப்பாக ஒரு சில பீடங்கள் இரண்டாம் அரையாண்டு கல்விச் செயற்பாடுகளை ஆரம்பித்த நிலையில் இந்த விடுமுறை அறிவிப்பு பெரும் அளெசகரியங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே தென்பகுதியில் உள்ள பல்கலைக்கழக செயற்பாடுகள் துரிதமாக இடம் பெற்றுவரும் நிலையில் இவ்வாறு தேவையற்ற விடுமுறைகளை அறிவிப்பது மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்குப் பாதிப்பாக அமைந்துள்ளது. இது எதிர்காலத்தில் மாணவர்களின் தகுதிகளையும் கேள்விக்குரியதாக்கி உள்ளது.
தமிழ் மக்களின் சொத்தமாக மதிக்கப்படும் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகச் செயற்பாடுகள் மாற்றம் அடைந்து வருவது கவலை அளித்து வருகிறது.
இந்த விரும்பாத விடயங்களை தவிர்த்து ஏனைய பல்கலைக்கழகங்களைப் போல் யாழ். பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பல்கலைக்கழகத்தை ஆரம்பியுங்கள்: யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தல்
Reviewed by NEWMANNAR
on
November 14, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 14, 2013
Rating:


No comments:
Post a Comment