மன்னார்- பாலியாறு கிராமத்திற்கு வடமாகாண விவசாய அமைச்சர் விஜயம்
மன்னார்- பாலியாறு கிராமத்திலுள்ள விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் விதை உள்ளீடுகளை வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
அடிப்படை வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தை நம்பியிருக்கும் மிக பின்தங்கிய கிராமங்களை முன்னேற்ற நடவடிக்கை எடுப்பதே அமைச்சின் முக்கிய நோக்கம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று முன்தினம் பாலியாறு கிராமத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் விவசாயிகளுடன் கலந்துரையாடியதுடன், விவசாய நிலங்களையும் பார்வையிட்டிருந்தார்.
இதன்போது மக்கள் தமது பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கையில், கிராமத்தில் சுமார் 105 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றார்கள். கிராமத்தின் அடிப்படை வாழ்வாதார தொழில் விவசாயமே.
ஆனால் கிராமத்திலுள்ள எவருக்கும் நிரந்தரமான அல்லது சொந்தமான விவசாய நிலம் இல்லை. இந்நிலையில் மக்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2 ஏக்கர் வீதம் 210ஏக்கர் காட்டை அழித்து அந்த நிலத்தில் விவசாயம் செய் து வருகின்றனர். ஆனால் கிராமத்திலிருந்து விவசாய நிலம் சுமார் 1கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருக்கின்றது.
மேலும் விவசாய நிலத்திற்குச் செல்லும் பாதை, விவசாய உபகரணங்கள், விதை உள்ளீடுகள் போன்றனவும் இல்லாத நிலையில் மிக இடர்பாடுகளுக்கும், வாழ்வாதார நெருக்கடிக்கும் மத்தியிலேயே விவசாயத்தை மேற்கெண்டு வருகின்றனர்.
மேலும் இந்த விவசாய நிலத்திற்கு ஆதாரமாக இருக்கும் காரையன் கன்னாட்டி குளம் 1985ம் ஆண்டிற்குப் பின்னர் இன்னமும் புனரமைக்கப்படாத நிலையில் இருக்கின்றது.
இதனால் விவசாயிகள் மழையை நம்பிய காலபோக நெற்செய்கையினை மட்டுமே செய்கின்றனர்.
எமது இந்தப்பிரச்சினை குறித்துப் பல தரப்பினரிடம் பல சந்தர்ப்பங்களில் எடுத்துக் கூறியபோதும் எவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுடன், எவரும் நேரடியாக வந்து எங்களுடைய பிரச்சினைகளை பார்க்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் பாலியாறு மக்கள் தற்போது விவசாயம் செய்துவரும் விவசாய நிலத்தை நிரந்தரமாக மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த அமைச்சர், விவசாய உபகரணங்கள், மற்றும் விதை உள்ளீடுகளை புதிதாக கிராமத்தில் தெரிவு செய்யப்படும் விவசாய குழு ஒன்றிற்கு ஊடாக வழங்கவும் அமைச்சு நடவடிக்கை எடுக்கும் எனவும் உறுதியளித்தார்.
மேலும் மாகாணத்தில் மிக பின்தங்கியிருக்கும் விவசாய கிராமங்களை முழுமையாக மேம்படுத்துவதே அமைச்சின் முதன்மையான நோக்கம் எனவும் மிக பின்தங்கிய கிராம விவசாயிகள் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்தவும் தீர்வினைப் பெற்றுக் கொள்ளவும் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார்- பாலியாறு கிராமத்திற்கு வடமாகாண விவசாய அமைச்சர் விஜயம்
Reviewed by NEWMANNAR
on
December 10, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 10, 2013
Rating:





No comments:
Post a Comment